முக்கா முக்கா மூனு வாட்டி.. தங்கபாலுவுக்கு முக்கியச் சிக்கல்!!
சென்னை: சும்மா கிடக்கும் சங்கை எடுத்து ஊதப் போகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியில். அவர் பாட்டுக்கு சிவனே என்று இருக்கும் முன்னாள் தலைவர் தங்கபாலுவுக்கு ஆப்பு வைக்க நடவடிக்கைகளை இளங்கோவன் தரப்பு முடுக்கி விட்டுள்ளதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.
ஜி.கே.வாசன் இருந்தவரைக்கும் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் அமர்க்களாக இருந்தது. சத்தியமூர்த்தி பவனில் அடிக்கடி மோதல் அமர்க்களப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் வாசன் போன பிறகு இளங்கோவன் கையே இப்போது ஓங்கியுள்ளது.
வலுவான இன்னொரு கோஷ்டியான ப.சிதம்பரம் - கார்த்தி சிதம்பரம் கோஷ்டிக்கு சரியான முறையில் இளங்கோவன் அவ்வப்போது ஆப்பு வைத்து வருவதால் அவர்களால் பெரிய அளவில் பஞ்சாயத்தைக் கூட்ட முடியாத நிலை.
மற்ற கோஷ்டிகள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. அப்படி ஒரு மகா அமைதி. இந்த நிலையில், முன்பு பரபரப்பான கோஷ்டித் தலைவராக இருந்து வந்த கே.வி.தங்கபாலு பக்கம் இளங்கோவனின் பார்வை பாய்ந்துள்ளதாம்
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரான தங்கபாலு, ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சத்திய மூர்த்தி பவனில் நடந்த 2 கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. நேற்று நடந்த செயற்குழுவிலும் அவரும், அவரது ஆதரவாளர்களும் பங்கேற்வில்லை. அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
எனவே அவர்களும் கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே 3 கூட்டங்களில் பங்கேற்காத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது உறுப்பினர்கள் பதவியும் பறிக்கப்படும் என்று இளங்கோவன் அறிவித்து இருப்பதாக முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
தங்கபாலு மீது இளங்கோவன் கை வைப்பாரா, அதனால் புதுப் பிரளயம் வெடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.