இது ரொம்ப லேட் – ஈ.வி.கே.எஸ்: வாயால் கெடுகிறார் இளங்கோவன்… கொதிக்கும் காங்.தலைகள்…
சென்னை: நான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்ற மறுநாளே என் மீது டெல்லிக்கு சென்று புகார் அளிப்பார்கள் என்று எதிர்பார்தேன். ஆனால் ரொம்ப லேட்டாக புகார் அளித்திருக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாத தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். அவர் காங்கிரஸ் கட்சித்தலைவராக பதவியேற்ற பின்னர் ஊடகங்களில் செய்திகளுக்கு பஞ்சமில்லை. சத்தியமூர்த்தி பவனில் பிரஸ்மீட் ஆகட்டும், குஷ்பு, நக்மா, என மகளிர் அணித்தலைவிகளை புகழ்வதாகட்டும் எல்லாமே பரபரப்பு செய்திதான்.
இன்னும் சிலமாதங்களில் வரப்போகிறது தமிழக சட்டசபை தேர்தல். கூட்டணி பேச்சுவார்த்தைகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்ட நிலையில் ஆட்சியில் பங்கு தரும் கட்சிகளுடன்தான் கூட்டணி, இல்லையேல் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று தில்லாக பேட்டி கொடுத்து வருகிறார்.
இவரது இந்த ‘தில்' பேட்டிக்கு பின்னணியில் ராகுல்காந்தி இருக்கிறார் என்று கூறப்பட்டாலும் காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டி தலைவர்கள் கூண்டோடு கிளம்பி டெல்லிக்குப் போய் ராகுல்காந்தி, சோனியாகாந்தியை சந்தித்து புகார் அளித்திருக்கிறார்கள்.
அப்படி என்னதான் புகார் சொன்னார்கள்?
சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சீனியர் தலைவர்களை அழைப்பதில்லை. குஷ்பு வடிவில் இந்திராவைப் பார்க்கிறேன்... சினிமாவில் பார்த்ததை விட நக்மா நேரில் ரொம்ப அழகு என்று வர்ணித்தது கட்சிக்குக் கெட்டப்பெயரை ஏற்படுத்தியுள்ளது என்பது புகாராகும்.
மூப்பனார் ஆட்சி அமைப்போம்!
கடந்த மாதம் சிவாஜி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது விஜயதாரணி எம்.எல்.ஏவுக்கு கேக் ஊட்டிவிட்டார். அதோடு விழாவில் பேசிய இளங்கோவன், தமிழகத்தில் மூப்பனார் ஆட்சி அமைப்போம் என்று உளறி... பின்னர் சுதாரித்து காமராஜர் ஆட்சி என்று கூறியது அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது. இது பற்றியும் அக்டோபர் 31ம் தேதி ராகுல்காந்தியுடம் பேசியுள்ளனர்.
தரம் தாழ்ந்த விமர்சனம்
பிரதமர் போயஸ்கார்டனில் உள்ள முதல்வர் வீட்டிற்கு சென்றது பற்றி விமர்சனம் செய்தது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபோக காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகள் பற்றியோ, பிரஸ்மீட் பற்றியோ காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் நடத்தும் மெகா டிவி, வசந்த் டிவிகளுக்கு தகவலே சொல்வதில்லை என்றும் கூறியுள்ளனர்.
வாய் ரொம்ப நீளம்
கட்சிக்காரர்களை மதிப்பதில்லை... சீனியர்களை கலந்து ஆலோசிப்பதில்லை... தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார். கூட்டணி ஆட்சி, துணை முதல்வர் பதவி என்றெல்லாம் பேசி, யாரையும் கூட்டணிக்கு வரவிடாமல் தடுக்கிறார். ராகுல்காந்தி தமிழகம் வந்த போது கறுப்புக்கொடி காட்டிய கோவனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகிறார் என்றெல்லாம் சோனியா காந்தியை நேற்று சந்தித்து புகார் கூறியுள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள்.
ஆண்டு விழா கொண்டாடிய இளங்கோவன்
இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த 1ம் தேதி தான் பதவியேற்று ஒர் ஆண்டு நிறைவடைந்ததை அரும்பாக்கத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு வில் அம்பு பரிசாகக் கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய இளங்கோவனின் ஆதரவாளர்கள் புகழ்ந்து தள்ளிவிட்டனர்.
கட்சியை தூக்கி நிறுத்தினேன்
நான் பதவியேற்று ஓர் ஆண்டுக்குள் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்தினேன் என்றார் இளங்கோவன். நான் பதவியில் இருந்த போது பையை நிரப்பவில்லை. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய சக்தி என்பது தலைவர்கள் என்று சொல்லக்கூடிய நாலைந்து பித்தலாட்டக்காரர்களிடம் இன்றி லட்சோப லட்ச காங்கிரஸ் தொண்டர்களிடம்தான் இருக்கிறது என்று ஒரே போடாக போட்டார்.
டெல்லி பறந்த இளங்கோவன்
இதனையடுத்து தலைமையிடம் இருந்து வந்த அழைப்பின் பேரில் நேற்று டெல்லி சென்ற இளங்கோவன், டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் பேசிய அவர், 'என்னைப் பற்றி புகார் கூறுவதற்கு ப.சிதம்பரம் தலைமையில் தமிழகத்தை சேர்ந்த தலைவர்கள் குழுவாக ஏன் சென்றார்கள் என்று புரியவில்லை என்றார்.
இது லேட் புகார்
நான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்ற மறுநாளே இதுபோன்ற புகார்கள் அளிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இப்படி ஓராண்டு தாமதமாக புகார் அளித்திருக்கிறார்கள். கட்சி தலைமைக்கு நான் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.
எனக்கு சம்மன் வரவில்லையே
என்னை உடனடியாக வருமாறு சோனியாகாந்தி சம்மன் எதுவும் அனுப்பவில்லை. எங்கள் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் தலைமையில் பேரணியாக திரண்டு சென்று குடியரசுத்தலைவரை சந்திப்பதற்காக அனைத்து மாநில தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நான் டெல்லிக்கு வந்திருக்கிறேன்" என்று கூலாக கூறினார்.
வாயால் கெடுகிறார் ஈ.வி.கே.எஸ்
இது ஒருபுறம் இருக்க ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது புகார் பட்டியல் வாசித்த மூத்த தலைவர் கிருஷ்ணசாமியோ, பித்தலாட்டக்காரத்தலைவர்கள் என்ற இளங்கோவனின் விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பந்தம் இல்லாமல் இப்படி பேசித்தான் இளங்கோவன் தன் வாயால் மாட்டிக்கொள்கிறார் என்றும் தெரிவித்தார். சட்டசபை தேர்தல் வரும்முன்னர் சத்தியமூர்த்தி பவனில் இன்னும் என்னென்ன கூத்துக்கள் அரங்கேறப்போகிறதோ?.