பேரறிவாளன் குற்றம் செய்யவில்லை எனில் விடுதலை செய்வதில் தவறு இல்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்
பேரறிவாளன் குற்றம் செய்யவில்லை எனில் விடுதலை செய்வதில் தவறு இல்லை என்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
சென்னை: பேரறிவாளன் குற்றமே செய்யவில்லை எனில் அவரை விடுதலை செய்வதில் எந்த தவறும் இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
26 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய காங்கிரஸ், பாஜக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் பேரறிவாளன் வாங்கிக் கொடுத்த பேட்டரியால்தான் பெல்ட் பாம் செய்யப்பட்டதா? என்கிற சர்ச்சை நீடிக்கிறது.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளங்கோவன், பேரறிவாளன் குற்றம் செய்யவில்லை எனில் அவரை விடுதலை செய்யலாம் என்றார்.
மேலும் ராமேஸ்வரம் மீனவர்களை கடலோர காவல்படை சுடவில்லை என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது எற்புடையது அல்ல என்றும் இளங்கோவன் கூறினார்.