காங்.-ல் மீண்டும் இணைவதைத் தவிர தமாகாவுக்கு வேறுவழியே இல்லை: வாசனுக்கு இளங்கோவன் பதில்
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இணைவதைத் தவிர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வேறுவழியே கிடையாது என்று தமிழக காங். கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமாகாவை கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸில் ஜி.கே.வாசன் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் இதனை வாசன் திட்டவட்டமாக மறுத்திருந்தார்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் நாங்களே உண்மையான காங்கிரஸ்; ஒருபோதும் காங்கிரஸுக்கு திரும்ப மாட்டோம் என்றார். இது குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளதாவது:
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். அதை அவர்களும் ஏற்றுக் கொண்டனர். நான் திரும்பவும் தலைவர் பதவிக்கு வரப் போவதில்லை.
தமாகாவைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வேற வழியே கிடையாது. தங்களது தவறை உணர்ந்து வருந்தினால் காங்கிரஸ் தொண்டர்களும் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்வார்கள்.
இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.