கருணாநிதிக்கு பாரத ரத்னாவை விட உயரிய விருது இருந்தால் அதையும் வழங்கலாம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
கருணாநிதிக்கு பாரத ரத்னாவை விட உயரிய விருது இருந்தால் வழங்கலாம் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையம்: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னாவை விட உயரிய விருது இருந்தால் அதையும் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"80 ஆண்டு கால அரசியல் தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது மட்டுமல்ல அதைவிட உயரிய விருது இருந்தாலும் வழங்க வேண்டும்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ராஜாஜி ஹால் வரை தமிழக அரசு உரிய பாதுகாப்பை வழங்கவில்லை. அவரை கூட்டம் நெருக்கி தள்ளும் அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருந்தது. இதற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்.
ராகுல் காந்தி வருவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் வந்த பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளித்த தமிழக அரசு ராகுலுக்கு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை. இந்த பாதுகாப்பு குறைபாட்டுக்கு தமிழக அரசு உரிய பதில் தரவேண்டும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராகுல் காந்திக்கு பாதுகாப்பு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று உயர் மட்ட அளவில் விசாரணை நடத்த வலியுறுத்துவோம்.
காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சியை பரிசீலனை செய்ய வேண்டிய இடத்தில் டிடிவி தினகரன் இல்லை. அதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது" என்று கூறினார்.