பெண் அதிகாரியை மிரட்டிய அமைச்சர் சரோஜாவை கைது செய்யுங்கள்.. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தல்
பெண் அதிகாரியை மிரட்டிய அமைச்சர் சரோஜா மீது வழக்கு போட்டு அவரை கைது செய்ய வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோடு: பெண் அதிகாரியை மிரட்டிய அமைச்சர் சரோஜா மீது வழக்கு போட்டு அவரை கைது செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா மீது தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும் ராஜமீனாட்சி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பணியிட மாறுதலுக்கு ரூ. 20 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் பணியில் நீடிக்க வேண்டும் என்று விரும்பினால் ரூ.30 லட்சம் தரவேண்டும் தரவேண்டும் என்று அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் மிரட்டல் விடுத்தாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார் ராஜமீனாட்சி.
இதையடுத்து அமைச்சர் சரோஜாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அரசு பெண் உயர் அதிகாரியை தமிழக அமைச்சர் சரோஜா ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டி உள்ளார். இந்த ஆட்சியில் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை.
அமைச்சரால் மிரட்டப்பட்ட பெண் அதிகாரிக்கும் அவரது குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதிகாரியை மிரட்டிய அமைச்சர் சரோஜா மீது வழக்கு போட்டு அவரை கைது செய்ய வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.