டீ ஆற்றக் கூட மோடி லாயக்கில்லை... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடும் விமர்சனம்
ஈரோடு: பிரதமர் மோடி டீ ஆற்றக்கூட லாயக்கில்லாதவர் என்று ஈரோட்டில் நடந்த கூட்டத்தின்போது ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என மோடி கடந்த 8-ம் தேதி அதிரடியாக அறிவித்தார். இதை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மோடியை கடுமையாக சாடினார்.
இந்நிலையில், ஈரோட்டில் இன்று தி.மு.க. சார்பில் மத்திய அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அதன் தமிழக முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என மோடி கடந்த 8-ந் தேதி அறிவித்து விட்டு 9-ந் தேதி ஜப்பான் சென்றுவிட்டார். அங்கு ஜப்பான் பிரதமருடன் கை குலுக்கி மகிழ்ந்தார். அதேசமயம் இந்தியாவில் மக்கள் வங்கிகளில் தவம் கிடக்க தொடங்கினர். கடந்த 20 நாட்களாக மக்கள் வங்கிகள் முன்புதான் தவம் கிடக்கிறார்கள்.
வாரத்தில் 6 நாட்கள் வேலைக்குப்போகும் தொழிலாளிகள் இப்போது 3 நாட்கள்தான் வேலைக்கு செல்லும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மீதி நாட்களில் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் தான் அவர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.
பிரதமர் மோடி கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் என்றும், டீ ஆற்றிக் கொண்டிருந்தார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படி கஷ்டப்பட்டிருந்தால் மக்கள் படும் இன்னல்களை அவர் அறிந்திருப்பார். இதை வைத்து பார்க்கும்போது மோடி டீ ஆற்றவும் லாயக்கற்றவர். பிரதமர் பதவிக்கும் லாயக்கற்றவராகி விட்டார் என்றார்.
மேலும், பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதை தமிழக அரசும் கூட கண்டு கொள்ளவில்லை. இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சரும் கண்டன அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதலில் விஜயகாந்தை முதல் அமைச்சர் ஆக்கி காட்டுவேன் என்று வீரவசனம் பேசி அவருடன் கூட்டணி வைத்தார்.
இப்போது தே.மு.தி.க. என்ற ஒரு கட்சியே இல்லாமல் போய் விட்டது. இந்திலையில், மோடி பக்கம் சாய்ந்து அவரது நடவடிக்கையை வைகோ பாராட்டத் தொடங்கி உள்ளார். மோடியையும் விரைவில் அவர் காலி செய்து விடுவார்.
தமிழகத்தில் இதுவரை 50 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 2 பேர் தற்கொலை செய்துள்ளனர். தமிழக அரசுக்கு விவசாயிகள் மீது எந்த அக்கறையும் கிடையாது. அமைச்சர்களோ எம்.எல்.ஏ.க்களோ... யாரும் விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்லக்கூட முன்வருவது கிடையாது.
பணம் வாங்க அலையும் மக்களுக்கு வங்கி ஊழியர்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு பணம் விநியோகித்து வருகிறார்கள். அவர்களது பணியையும் விரைவான சேவையையும் பாராட்டுகிறேன். பொதுமக்கள் பொறுமைக்கு ஒரு அளவு உண்டு பொறுத்து.... பொறுத்து பார்ப்பார்கள். பொறுமைக்கு ஒரு அளவு உண்டு அது எரிமலையாக வெடித்தால் மிகப்பெரிய போராட்டமாக அது மாறும். அப்படி ஒரு கலவர சூழ்நிலையை மோடி ஏற்படுத்தி வருகிறார் என்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்