பழ.கருப்பையா மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும்: ஈ.வி.கே.எஸ். விருப்பம்
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, திமுக தலைவர் கருணாநிதி கூட்டணிக்கு அழைத்தது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து கட்சி மேலிடம் முடிவு எடுத்து விரைவில் அறிவிக்கும். எங்களை பொறுத்த வரை தனித்து போட்டியிட வேண்டும் என்ற கருத்தை கட்சியினர் கூறி வருகின்றனர். கட்சி தொண்டர்கள் விருப்பம், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றிய கருத்துக்களையெல்லாம் தெரிவித்து இருக்கிறோம்.
பழ.கருப்பையா மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும் என நான் விரும்புகிறேன். பழ.கருப்பையா எல்லோராலும் மதிக்கப்படக்கூடியவர். கருத்துக்களை தாங்கி கொள்ள முடியாமல் இப்படி தாக்குதல் நடத்துவது அ.தி.மு.க.வுக்கு கை வந்த கலை. பழ.கருப்பையாவை பொறுத்தவரை சில்லரைத் தனங்களை கண்டு பயப்படமாட்டார். எதையும் சந்திக்கும் திறன் படைத்தவர். தேசிய உணர்வு கொண்ட அவர் காங்கிரசுக்கு வர வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விருப்பம் தெரிவித்துள்ளார்.