குற்றவாளி ஜெ.விற்கு மணிமண்டபம் கட்டுவது எந்த விதத்தில் நியாயம்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் சுளீர் கேள்வி
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியான ஜெயலலிதாவிற்கு மணி மண்டபம் கட்டக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோடு: ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அரசு செலவில் மணி மண்டபம் கட்டக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன், ஒரு குற்றவாளிக்கு மணிமண்டபம் கட்டுவது எந்த விதத்தில் நியாயம்? அதுவும் அரசுக்கு சொந்தமான கடற்கரையில் மணிமண்டபம் கட்டுவது மிகவும் தவறு.
இது தொடர்பாக யாராவது கோர்ட்டுக்கு சென்றால் கண்டிப்பாக மணிமண்டபம் கட்டக் கூடாது என்றுதான் நீதிமன்றம் உத்தரவிடும். ஆகவே, இதுபோன்ற குற்றவாளிகளை முன்னிறுத்தி அரசியல் செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
அப்போதுதான், இளம் தலைமுறையினர், தான் ஒரு குற்றவாளியாகக் கூடாது என்ற எண்ணத்தோடு, நல்ல முறையில் படித்து உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைப்பார்கள். அதே போன்று ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.