ஸ்டாலின் மாதிரி நாமும் டூர் போகலாமே.. இளங்கோவனிடம் ராகுல் ஆலோசனை
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத் தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டெல்லி சென்று, அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரசார வியூகம், திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு போன்றவை குறித்து இருவரும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
இந்தத் தொகுதி பங்கீட்டு குழுவில் பங்கேற்கும் நிர்வாகிகள் குறித்த பரிந்துரைப் பட்டியலையும் அப்போது ராகுலிடம் இளங்கோவன் வழங்கினார்.
தேர்தல் வியூகம் குறித்த ஆலோசனையின் போது, பொதுக்கூட்டங்களை விட மக்களை நேரடியாகச் சந்திக்கும் வகையில் சாலைமார்க்க பிரச்சாரத்தை திட்டமிட வேண்டும் என ராகுல் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
இதனால் ஸ்டாலினின் நமக்கு நாமே சுற்றுப்பயணம் போலவே ராகுல்காந்தியின் பிரச்சாரப் பயணத் திட்டமும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும், எந்த மாநிலத்துக்கு சென்றாலும் சாலை மார்க்கமாக நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பதையே ராகுல் காந்தி வழக்கமாக கொண்டுள்ளார். சென்னை வெள்ள பாதிப்பின் போது கூட சாலைமார்க்கமாகவே மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கி ராகுல் ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக மாநாட்டில் ராகுல்:
இதற்கிடையே, திமுக சார்பில் திருச்சியில் அடுத்தமாதம் 20-ந்தேதி சமூக நீதி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள ராகுல்காந்திக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பின் போது, ராகுலிடன் இந்த மாநாடு குறித்தும் ஈவிகேஎஸ் ஞாபகப் படுத்தியுள்ளார். அப்போது, திமுக மாநாட்டில் கலந்து கொள்ள ராகுல் சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில், ராகுல் காந்தியும் இதில் பங்கேற்பார் எனக் கூறப்படுவதால், இந்த கூட்டம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் தரப்பில் இருந்து இதுவரை சம்மதம் தெரிவிக்கப்படவில்லை.