சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்!… சந்தேகம் கிளப்பும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்!!
சென்னை: ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பு வெளிவந்து 3 நாட்களாகியும் எவரையும் சந்திக்காமல் இருப்பதன் மர்மத்தை நாட்டு மக்களுக்கு யார் விளக்கப் போகிறார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது 18 ஆண்டுகாலம் நடைபெற்ற சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீடு குறித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு 11.5.2015 அன்று நீதிபதி கே.ஆர். குமாரசாமி வழங்கியிருக்கிறார். இதுவரை நீதித்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பல்வேறு சர்ச்சைகளும், சந்தேகங்களும் தீர்ப்பு குறித்து நாள்தோறும் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.
ஏன்ப்பா ஏன்?
தீர்ப்பு வெளிவந்த அன்று உற்சாக வெள்ளத்தில் மிதந்த அ.தி.மு.க.வினரின் மகிழ்ச்சி சில மணிநேரங்களே நீடித்தது. அதற்கு என்ன காரணம் என்று எவருக்கு தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சியடைய வேண்டிய ஜெயலலிதா தனிமை சிறையிலிருந்து இதுவரை வெளியே வரவில்லை. இதுபோன்ற மகிழ்ச்சியான சமயங்களில் பால்கனியில் இருந்து அங்கே திரண்டிருக்கும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு வெற்றிச் சின்னத்தை கூட காட்ட முன்வராதது மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை விதைத்து வருகின்றன.
முதல்வர் பதவியேற்பது எப்போது?
இன்று முதலமைச்சராக பதவியேற்பார்; நாளை பதவியேற்பார் என்று நாள்தோறும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறதே தவிர, முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட எவரையும் சந்தித்ததாக எந்த அடையாளங்களும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. எல்லாமே அரண்மனை ரகசியமாக இருக்கிறது.
சந்திக்காத மர்மம்
ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பு வெளிவந்து 3 நாட்களாகியும் எவரையும் சந்திக்காமல் இருப்பதன் மர்மத்தை நாட்டு மக்களுக்கு யார் விளக்கப் போகிறார்கள்?
பேய் அறைந்தது போல
ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் சந்திக்கச் சென்ற 19 அமைச்சர்கள் 2 மணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்தபோது அவர்கள் முகத்தில் மிகப்பெரிய சோர்வும், பதட்டமும் நிறைந்து பேய் அறைந்தாற் போல் அவர்களது முகங்கள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரே மர்மம்தான்
உண்மையிலேயே நீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக இருந்தால் ஏன் இத்தகைய சோர்வுக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டார்கள் என்பதை எவருமே புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லாமே மர்மமாக இருக்கிறது.
தீர்ப்பில் குளறுபடி
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஆர். குமாரசாமி வழங்கிய தீர்ப்புகளில் இருக்கிற குளறுபடிகளை நீக்குவதற்கு அவரே நடவடிக்கை எடுக்க இருப்பதாக சில நாளேடுகளில் செய்திகள் வெளிவருகிறது. இதைப் பார்த்து எள்ளி நகையாடுவதைத் தவிர நமக்கு வேறொன்றும் தெரியவில்லை.
திருத்தி எழுத முடியுமா?
பரிட்சை எழுதச் சென்ற மாணவர்கள், எழுதி முடித்து வெளியே வந்த பிறகு மீண்டும் மாணவர்கள் ஆசிரியரிடம் சென்று சிலவற்றை எழுத மறந்துவிட்டேன், மீண்டும் எழுத அனுமதிக்க வேண்டும் என்று கேட்டால் ஆசிரியர் அனுமதிப்பாரா ? அதைப்போல தீர்ப்பு எழுதிய நீதிபதி சில தவறுகளை செய்து விட்டேன் என்று சொல்லி மறுபடியும் தீர்ப்பை மாற்றி எழுதுவதற்கு அனுமதி கேட்பதை விட கேலிக் கூத்தான விஷயம் வேறு ஏதாவது இருக்க முடியுமா ?
திருட்டுக்கு தண்டனை
100 ரூபாய் திருடினால் தண்டனை, 20 ரூபாய் திருடினால் தண்டனையில்லை என்பதைப் போல ஜெயலலிதா 20 ரூபாய் திருடவில்லை, 8 ரூபாய் தான் திருடியிருக்கிறார் என்று நீதிபதி கே.ஆர். குமாரசாமி சொல்லி விடுவித்திருப்பதை விட விந்தையானது எதுவும் இருக்க முடியாது.
கழுத்துக்கு கத்தி
ஊழலுக்கு விசித்திரமான அளவுகோல் விதித்திருக்கிற குமாரசாமியின் தீர்ப்பு மேல்முறையீட்டில் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படாது என்கிற நம்பிக்கை நமக்கிருக்கிறது. இன்றைக்கு கர்நாடக நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுவித்திருக்கலாம். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பு வருகிற வரை ஜெயலலிதாவின் தலையில் தொங்குகிற கத்தியாகத் தான் இவ்வழக்கு இருக்க முடியும்.
பிரதமர் மோடி வாழ்த்து
ஊழலை எதிர்க்க அவதரித்ததாக வாய் கிழியப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஊழல் குற்றவாளியான ஜெயலலிதா விடுதலையானதற்கு வாழ்த்து தெரிவிக்கிறார். அதேநேரத்தில் அவரது கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக கூறுகிறார். ஏன் இந்த இரட்டை வேடம்?
பாஜக வாழ்த்துமடல்
கடந்த சில மாதங்களாக ஜெயலலிதாவின் ஊழலைப் பற்றி பேசிவந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்திரராஜன் போன்ற பா.ஜ.க.வினர் திடீரென ஜெயலலிதாவுக்கு வாழ்த்து மடல் வாசிப்பது ஏனென்று தெரியவில்லை. இதில்; குறைந்தபட்ச சூடு சொரணை தமிழக பா.ஜ.க.வினருக்கு இருக்குமேயானால் சுப்பிரமணிய சுவாமியை பா.ஜ.க.விலிருந்து நீக்குவதற்கு குரல் கொடுப்பார்களா ?
வேதனையில் தமிழர்கள்
இந்தியாவிலேயே அற்புதமான முதலமைச்சர்களை பெற்றிருந்த தமிழகம் இன்றைக்கு இத்தகைய அவலநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதே என்று நாட்டு மக்கள் வேதனையில் புழுங்கி வருகிறார்கள்.
எங்கே போகிறது தமிழகம்
கர்நாடக நீதிமன்ற தீர்ப்பு குறித்து நாட்டு மக்கள் பேசுகிற பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை. தமிழகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது ? இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள சக்திகளுக்கு இருக்கிறது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.