ஆர்.கே.நகரில் அதிமுக செயலாளரைப் போல செயல்படும் சக்சேனா... வழக்கு தொடர ஈவிகேஎஸ் திட்டம்
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையத் தலைவர் சந்திப் சக்சேனா அதிமுக செயலாளரைப் போல செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கத் தவறினால், சந்தீப் சக்சேனா மீது வழக்குத் தொடருவோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
‘‘மக்களால் நான், மக்களுக்காகவே நான், எனக்கு எல்லாமே நீங்கள்தான்'' என்று மக்களை மயக்குகிற வகையில் ஜெயலலிதா பேசியிருக்கிறார். தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கொஞ்சம் கூட தயங்காமல் கூறுகிற துணிச்சல் ஜெயலலிதாவுக்குத்தான் இருக்க முடியும்.
தமிழ்நாட்டில் இவரது ஆட்சிக்காலத்தில் 4 ஆயிரத்து 992 மெகாவாட் மின்சார உற்பத்தி கூடுதலாக செய்யப்பட்டதாக கூறுகிறார். மின் உற்பத்திக்கான திட்டம் தொடங்கப்பட்டு குறைந்தது 5 ஆண்டுகள் கழித்துத்தான் மின்சார உற்பத்தியை பெற முடியும். கடந்த ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட மின் உற்பத்தி திட்டத்தின் பயனைத்தான் இவரது ஆட்சியின் சாதனையாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.
ஆர்.கே.நகர் தொகுதியைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையத் தலைவர் சந்திப் சக்சேனா அ.தி.மு.க.வின் செயலாளரைப் போலவே செயல்பட்டு வருகிறார். நியாயமான, பாரபட்சமற்ற தேர்தலை நடத்த வேண்டிய தமிழக தேர்தல் ஆணைய தலைவர் சந்தீப் சக்சேனா மீது தலைமை தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க தவறினால் இவர் மீது வழக்கு தொடருவதற்கான முயற்சியில் இறங்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.