ஜெ.க்கு ஆதியும் அந்தமுமாக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன்.. மீண்டும் ஆறுமுகசாமி கமிஷனில் ஆஜர்
தமிழக அரசின் முன்னாள் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் மீண்டும் ஆஜரானார்.
Recommended Video
சென்னை: தமிழக அரசின் செயல்பாடுகள், ஜெயலலிதா ரகசியங்கள் என்று அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரிந்தவர் என்று கருதப்படுபவர் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் மீண்டும் ஆஜராகியுள்ளார்.
ஜெயலலிதாவின் இறுதி காலகட்டத்தில் அவரின் அரசியல் வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கையிலிருந்து ஒரு பெயரை நீக்க முடியாது என்றால் அது ஷீலா பாலகிருஷ்ணனின் பெயர் தான். அவர் சிறைக்கு சென்ற நாட்களாக இருக்கட்டும், உலகை விட்டு சென்ற நாட்களாக இருக்கட்டும் தமிழகத்தை முன்புலத்திலும் பின்புலத்திலும் இருந்து ஆட்சி செய்தவர் தான் ஷீலா பாலகிருஷ்ணன்.
ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டிருந்த ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று மீண்டும் ஆஜரானார் ஷீலா பாலகிருஷ்ணன். பல மர்மங்களுக்கு இவரிடம் விடை இருப்பதால் ஆணையம் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சரி யார் இந்த ஷீலா பாலகிருஷ்ணன் என்று பார்ப்போம்.
ஷீலா பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்
திருவனந்தபுரத்தை பூர்வீகமாக கொண்ட ஷீலா பாலகிருஷ்ணன் 1976-ம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வானார். இவர் தமிழகத்தின் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகித்துள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சி காலத்திலும் இறுதி காலக்கட்டத்திலும் அவருக்கு உறுதுணையாக ஷீலா பாலகிருஷ்ணன் இருந்தார்
ஜெயலலிதாவின் செயலாளர்
முதல்வர் ஜெயலலிதாவின் செயலாளராக 2002-ம் ஆண்டு பணியமர்த்தப்பட்டார். பெண் அதிகாரிகளை எப்போது ஊக்கவிக்கும் ஜெயலலிதா இவரையும் ஊக்கவித்தார், இதனைத்தொடர்ந்து மீண்டும் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழகத்திம் தலைமைச் செயலாளரானார் ஷீலா பாலகிருஷ்ணன்
ஆக்டிங் முதல்வர் ஷீலா?
2014ம் ஆண்டு ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் யாரும் எதிர்ப்பாராத வகையில் பதவி இழந்தபோது, பன்னீர்செல்வம் முதல்வரானார். ஆனால் அப்போதும் பெயருக்கு தான் அவர் முதல்வராக இருந்தார், பவர் அனைத்தும் ஷீலாவிடம் தான் இருந்தது. போயஸ் தோட்டத்திலும் அவர் அப்போது நெருக்கம் காட்ட தொடங்கினார். ஒருகட்டத்தில் தவிர்க்க முடியாத நபராகவும் மாறினார்.
பதவிகாலத்தை நீட்டிக்க முடியவில்லை
2014ம் ஆண்டு அவரின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் அதனை நீட்டிக்க பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. தனிப்பட்ட முறையில் இவரும், பதவி நீட்டிப்பிற்காக அரசும் பெரும்பாடு பட்டது. அதற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அரசு ஆலோசகர் மற்றும் தனி செயலாளர் என்ற பதவிகள் ஷீலாவுக்கு வழங்கப்பட்டன.
இன்னொரு சசிகலா
ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவின் நிழல்போல எங்கும் தென்பட்டார் ஷீலா, விழாக்கள், திருமணங்கள், அரசு நிகழ்ச்சிகள் என்று எங்கும் ஜெயலலிதாவின் உடன் ஷீலா இருந்தார். இன்னோரு சசிகலாவாகவே பார்க்கப்பட்டார் ஷீலா. இதுவே அவருக்கு சக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மத்தியில் பெரும் அதிகாரத்தை ஏற்படுத்தியது. இந்த அதிகார போதையே பல முறைகேடுகளுக்கு வித்திட்டது.
ஷீலா மீது மறைமுக புகார்கள்
ஒருகட்டத்தில் ஜெயலலிதாவின் அதிகாரத்தை கையிலெடுக்கும் அளவிற்கு ஷீலாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டதாக அவர் மீது சில விமர்சனங்கள் எழுந்தன.
நிழலாக இருந்தார்
ஜெயலலிதாவின் நிழலாக இருந்த ஷீலாவுக்கும் சசிகலாவுக்கும் இடையேயான உறவு சீறிய முறையில் இருந்து வருகிறது. அதனால் தான் இதுவரை ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் கடந்த ஒரு வருடமாக நம் அனைவரின் மனதிலும் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் ஷீலாவிடம் விடை இருக்கிறது. அந்த விடைகளை விரைவில் ஆறுமுகசாமி ஆணையம் தோண்டி எடுக்கும் என்றும் கருதப்படுகிறது.