மாஜி டிஜிபி நடராஜ் மயிலாப்பூரில் போட்டியிட விருப்பம்... அதிமுகவில் விருப்ப மனு
சென்னை: தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பேட்டியினால் தவறுதலாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் ஒரே நாளில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட முன்னாள் டி.ஜி.பி. நடராஜ் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப்பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வருகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க. கடந்த சில மாதங்களுக்கு முன்பே வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமித்தது. மேலும் புதிய மாவட்ட செயலாளர்களின் பட்டியலையும் வெளியிட்டது.
இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. சாதனைகளை விளக்கும் சிறப்பு அம்சங்களுடன் கூடிய பிரசார வாகனத்தையும் மாவட்டம் வாரியாக வழங்கி, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்களிடம் இருந்து கடந்த 20ம்தேதி முதல் விருப்பமனு வாங்கி வருகிறது.
விருப்ப மனுக்கள் விற்பனை
ராயப்பேட்டையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் 5 சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்பமனுக்கள் பெறப்படுகின்றன. புதுச்சேரி மற்றும் கேரளா சட்ட மன்ற தேர்தலுக்கான விருப்பமனு வழங்குவதற்கு தனியே கவுண்ட்டர் அமைக்கப்பட்டு இருந்தது.
ஜெயலலிதா பெயரில்
தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று விருப்பமனுக்களை பெற்றனர். முதல் நாளில் அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும், மாநில நிர்வாகிகளும் போட்டி போட்டு முதல்வர் ஜெயலலிதா பெயரில் விருப்பமனு பெற்று, தாக்கல் செய்தனர். ஆளுக்கு இரண்டு மனுக்களை தாக்கல் செய்வதால் மனுக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாஜி டிஜிபி நடராஜ்
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வரிசையில் நின்று தொண்டர்கள் விருப்பமனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர். அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் டி.ஜி.பி. நடராஜ் உள்பட பலரும் விருப்பமனுக்களை பெற்று, தாக்கல் செய்தனர். முன்னாள் டி.ஜி.பி. நடராஜ், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்தார்.
முன்னாள் டிஜிபி நட்நாஜ்
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பதவி உள்பட பல்வேறு பதவிகளில் இருந்தவர் ஆ.நடராஜ். கடைசியாக சிறைத்துறை, தீயணைப்புத் துறை டிஜிபியாக இருந்தார். சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியைப் பெறுவதற்காக அவர் சட்டப் போராட்டமும் நடத்தி வந்தார்.
2014ல் கட்சியில் இணைந்த நட்ராஜ்
நேர்மையான அதிகாரி என்று பொதுவாக கூறப்பட்டாலும் கூட அதிமுக அனுதாபி என்றும் பார்க்கப்பட்டவர் நடராஜ். அதிமுக ஆட்சியில் இவர் டிஜிபி பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் டிஎன்பிஎஸ்சி தலைவராக கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரலில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டார் நடராஜ்.
முதல்நாள் நீக்கம் மறுநாள் சேர்ப்பு
அ.தி.மு.க. தென்சென்னை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் டி.ஜி.பி. ஆர்.நடராஜ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி வைக்கப்படுவதாக கடந்த 13-12-2015 அன்று திடீரென்று அறிவித்தார் ஜெயலலிதா. செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றி தந்தி டிவி செய்த குளறுபடியில் பலிகடா ஆனார் நட்ராஜ். நான் அவனில்லை என்று தலைமைக்கு அவர் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படவே, முதல்நாள் அறிவிப்பை ரத்து செய்து செய்து விட்டு மீண்டும் கட்சியின் அடிப்படை உறுப்பினராக செயல்படுவார் என்று அறிவித்தார் ஜெயலலிதா.
6ம் தேதிவரை விருப்பமனு
இந்த நிலையில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட மனு அளித்துள்ளார் டிஜிபி நடராஜ். இது தவிர கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்கள் உதவியாளர்கள் மூலம் ரூ.11 ஆயிரம் செலுத்தி, விருப்ப மனுக்களை பெற்றனர். முதலில் 3ம் தேதிவரை விருப்பமனு பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வரும் 6ம்தேதி வரை அ.தி.மு.க. சார்பில் விருப்பமனு பெறப்படுகிறது.
விரைவில் நேர்காணல்
விருப்பமனுக்கள் பெறப்பட்ட ஒரு சில நாட்களில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் இருந்து கட்சியின் தலைமை நேர்காணல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளது. நேர்காணலுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமை வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும். அதனை தொடர்ந்து தேர்தல் அறிக்கை வெளியிடவும், பிரசாரத்திற்கும் தயாராக உள்ளதாக அ.தி.மு.க. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஜிபி நட்ராஜ் மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுவாரா? இன்னும் சில வாரங்களில் தெரிந்து விடும்.