கொல்கத்தா கொண்டு செல்லப்படுகிறார் கர்ணன்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கர்ணன் சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
சென்னை: உச்ச நீதிமன்றத்தால் கைது நடவடிக்கைக்கு ஆளான கர்ணன் சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற இன்னாள், முன்னாள் நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறியது குறித்து நேரில் விளக்க வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிபதியாக இருந்த கர்ணனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
ஆனால் அவர் நேரில் ஆஜராகவும் இல்லை, விளக்கமும் அளிக்க வில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கைதிலிருந்து விலக்களிக்க பல முறை மனு தாக்கல் செய்தும் உச்சநீதிமன்றம் அதை நிராகரித்தது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கர்ணன் தலைமறைவாக இருந்தார். அந்த நிலையிலேயே அவர் கடந்த 12-ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
அவரை கைது செய்ய மேற்கு வங்க போலீஸார் தமிழக போலீஸாரின் உதவியை நாடினர். கோவையில் மலுமிச்சம்பட்டியில் உள்ள ரிசார்டில் தங்கியிருந்த அவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்துக்குள் இன்று காலை அழைத்து வரப்பட்ட கர்ணன் காலை 11 மணிக்கு கொல்கத்தா செல்லும் விமானத்தில் அழைத்து செல்லப்படுகிறார்.