வாவ்.. 55 வயதிலும் மாரத்தானில் அசத்தும் மாஜி மேயர் மா.சு... கின்னஸ் சாதனை படைக்க தீவிரம்!
சென்னை: சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் திமுகவைச் சேர்ந்த மா.சுப்ரமணியம், மாரத்தான் ஓட்டத்தில் புதிய சாதனை படைத்து வருகிறார். அதாவது அதிக அளவிலான மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்ட சாதனையாளராக அவர் மாறியுள்ளார்.
இன்று சென்னை அருகே வண்டலூரில் நடந்த 21.1 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு முழு தூரத்தையும் ஓடி முடித்தார் மா.சு. 55 வயதாகும் இவர் அதிக அளவிலான மாரத்தான் போட்டிகளில் ஓடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று ஓடி வருகிறார் மா.சுப்பிரமணியம் என்பது முக்கியானது.
வண்டலூர் மாரத்தான்
இன்று வண்டலூர் அருகே உள்ள மேலக்கோட்டையூரில் நடைபெற்ற 21.1 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று ஓடினார் மா.சு. 400 பேர் பங்கேற்ற இந்த ஓட்டத்தில் இந்தியா மட்டுமில்லாமல் கென்யா, பிரான்ஸ் உள்பட பலவேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று ஓடினார்கள்.
29 மாதங்களில்
மா.சுப்பிரமணியம் கடந்த 29 மாதங்களில் மட்டும் 31 மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று ஓடியுள்ளார். இது சாதனையாம். ஆசிய அளவிலான சாதனை என்றும் சொல்கிறார்கள்.
50 மாரத்தானில் ஓடினால் கின்னஸ் சாதனை
3 வருடங்களில் 50 மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு ஓடி புதிய உலக சாதனை படைக்கவும் மா.சு தயாராகி வருகிறாராம். அடுத்து 24ம் தேதி சென்னை, 31ம் தேதி போரூர், 7ம் தேதி ஜவ்வாதுமலை, 21ம் தேதி புனே, 28ம் தேதி ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கிறார் மா.சு.
யோகாவிலும் கிங்
மா.சுப்பிரமணியம் ஓட்டத்தில் மட்டும் அல்லாமல் யோகாசனத்திலும் அதிக ஆர்வம் கொண்டவர். தொடர்ந்து யோகா செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கென்யருக்கு முதல் பரிசு
முன்னதாக இன்று நடந்த மாரத்தானில், 21 கிலோ மீட்டர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் கென்யா நாடடைச் சேர்ந்த ஐசா என்பவரும் பெண்கள் பிரிவில் நான்சி என்பவரும் முதல் பரிசு பெற்றனர். 10 கிலோ மீட்டர் ஓட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த மனோ, திவ்யபாரதி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.