இறந்து 5 பேருக்கு உயிர் கொடுத்த ராணுவ வீரர் – கோவையில் நெகிழ்ச்சி
கோவை: கோவையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைகுளத்தை சேர்ந்தவர் முருகேசன். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், எஸ்.மேட்டுப்பாளையத்தில் பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும், விக்னேஷ்குமார், கோபி ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் முருகேசன் தாமரைகுளத்தில் இருந்து கோவை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் முருகேசன் தலையில் படுகாயமடைந்தார்.
இதில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கோவை குனியமுத்தூரை சேர்ந்த அசாருதீன், ரத்தினபுரியை சேர்ந்த கோபிநாத் ஆகியோரும் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக முருகேசன் மட்டும் கோவை குப்புசாமிநாயுடு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு முருகேசனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினரின் விருப்பப்படி முருகேசனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
அதன்படி முருகேசனின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் கே,எம்.சி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 பேருக்கும், 2 கண்கள் கோவை சங்கரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 பேர்களுக்கும் தானமாக வழங்கப்பட்டன.
மூளைச்சாவு அடைந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் முருகேசன் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியதின் மூலம் ஐந்து பேர் மறுவாழ்வு பெற்றனர்.