'அக்ரி'யை அதட்டி விசாரணைக்கு வரவழைத்து 'காப்பு' மாட்டிய சி.பி.சி.ஐ.டி. போலீஸ்!
சென்னை: வேளாண்மைத் துறை பொறியாளர் முத்துக்குமாரசாமி வழக்கில் விசாரணைக்கு வர தயக்கம் காட்டிய முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை லேசாக மிரட்டித்தான் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வரவழைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நெல்லை வேளாண்மை துறை முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி தச்சநல்லூர் ரயில்வே கேட் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் பகலில் சென்னையில் வேளாண்மைத்துறை தலைமை பொறியாளர் பதவியில் இருந்த எம்.செந்திலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். அவரும் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்த அதிகாரி முத்துக்குமாரசாமியிடம் செல்போனில் பேசி, செந்திலும் பலமுறை மிரட்டியது தெரியவந்தது.
வாக்குமூலம் கொடுத்த செந்தில்
அப்போதைய வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொன்னதின் பேரில்தான், தான் செல்போனில் பேசி மிரட்டியதாக, செந்தில் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.
குலதெய்வ கோவிலில்..
இதன் அடிப்படையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி.போலீசார் அழைத்தனர். சி.பி.சி.ஐ.டி.போலீசார் அழைத்தபோது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை அருகே உள்ள தனது குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்தார்.
வருகிறேன்..
உங்களிடம் ஆரம்ப கட்ட விசாரணைதான் நடத்த இருக்கிறோம், சிறிது நேரத்தில் விட்டு, விடுகிறோம் என்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் தெரிவித்தார். உடனே அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் சென்னை புறப்பட்டு வந்தார். அவர் சென்னை வந்து சேர்ந்த போது இரவு 8 மணிக்கு மேல் ஆகி விட்டது.
வரலைன்னா.. வருவோம்..
இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்குபோய் சாப்பிட்டு விட்டு வருகிறேன் அல்லது மறு நாள் காலையில் வருவதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி சி.பி.சி.ஐ.டி. அதிகாரியிடம் கூறியதாக தெரிகிறது. உங்களுக்கு சாப்பாடு நாங்கள் வாங்கி தருகிறோம், நீங்கள் உடனே வரவேண்டும், இல்லா விட்டால் நாங்கள் வந்து அழைத்து வர வேண்டி இருக்கும், என்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரி சற்று அதட்டலாக கூறியிருக்கிறார்.
அதிகாலையில் கைது
இதனால் அச்சமடைந்த அக்ரி, விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கலாமா? என்று ஆலோசித்திருக்கிறார். இருப்பினும் ஆரம்ப கட்ட விசாரணை என நினைத்துதான் போனாராம்.. அங்கே விசாரணையை எதிர்கொள்ளும்போதே தாம் கைது செய்யப்படுவது உறுதி என தெரிந்ததும் ஆடிப்போனாராம் அக்ரி.
இதன் பின்னர் அதிகாலையில் கைது செய்யப்பட்ட அக்ரி நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.