ஜெ. சிகிச்சை பெற்ற சிடிக்காகவே இந்த ரெய்டு-கோடிக்காக அல்ல: முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் பொளேர்
வருமான வரித் துறை அதிகாரிகள் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிடியையே தேடி வருகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் தெரிவித்துள்ளார்.
சென்னை: வருமான வரித் துறை அதிகாரிகள் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற வீடியோவை தேடி தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர் என்று டிடிவி தினகரனின் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான இன்பத் தமிழன் தெரிவித்தார்.
சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் கடந்த 5 தினங்களாக வருமான வரித் துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஜெயா டிவி சிஇஓ விவேக் வீட்டில்தான் அதிகாரிகள் நங்கூரமிட்டு உட்கார்ந்துள்ளனர்.
இதுகுறித்து டிடிவி தினகரனின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான இன்பத் தமிழன் சன் நியூஸ் சேனலில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் சசிகலா உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடு மற்றும் நிறுவனங்கள் என 187 இடங்களில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தத் தொடங்கினர். இது முழுவதும் ஜெயா டிவியின் நிர்வாக அதிகாரி விவேக் ஜெயராமனை குறி வைத்து நடத்தப்பட்டது.
டிவி சானலை நடத்தக் கூடாது
ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளேடு ஆகியவற்றை விவேக் கவனித்து வந்தார். ஜெயா டிவியில் உள்ள ஒளிபரப்பெல்லாம் அரசுக்கு விரோதமாக இருக்கிறது. அதனால் ஜெயா டிவியையும், நமது எம்ஜிஆரையும் நடத்தக் கூடாது என்று தமிழக அரசு நினைக்கிறது.
எம்.பி. மைத்ரேயன் சந்திப்பு
ரெய்டுக்கு முக்கிய காரணம் நரேந்திர மோடிதான். ஆனால் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது மாநில அரசைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும்தான். இந்த ரெய்டு நடந்து வரும் வேளையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் எம்.பி. மைத்ரேயன் சென்று நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்ததாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
தமிழக அரசு பக்கா பிளான்
அதிமுக அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து ஜெயா டிவியையும், நமது எம்ஜிஆரையும் கைப்பற்றுவோம் என்று கூறினர். அதன் விளைவுகள்தான் இந்த ரெய்டு என்பது என் கருத்து. விவேக் பொறுப்பின் கீழ் உள்ள ஜெயா டிவியையும், நமது எம்ஜிஆரையும் கையகப்படுத்தவே இதுபோன்று பிளான் செய்து ரெய்டு நடத்த கூறியுள்ளனர்.
அதிமுகவின் சொத்தும் இல்லை
ஜெயா டிவியும், நமது எம்ஜிஆரும் விவேக்கின் குடும்பச் சொத்து இல்லை. அதேவேளையில் அதிமுகவின் சொத்தும் இல்லை. அது ஒரு தனியார் நிறுவனம். ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக சசிகலா, தினகரன், திவாகரன் உள்ளிட்டோர் உள்ளனர்.
அதிக லாபம்
30 வயதாகும் விவேக்கிற்கு இத்தனை சொத்துகளா என்று எல்லாரும் கேள்வி எழுப்புகின்றனர். விவேக் ஜெயா டிவி உள்ளிட்ட சில தொழில்களை நடத்துகிறார், அதில் லாபம் ஈட்டி இன்னொரு தொழில் தொடங்கினார். இப்படி பல்வேறு தொழில்களை தொடங்கி முன்னேறுகிறார்கள். அதனால் உழைத்து சம்பாதித்த சம்பாதித்து சேர்த்த சொத்துகள்தான் அவை.
சிடிக்காவே ரெய்டு கோடிக்காக அல்ல
கடந்த 3 தினங்களாக எந்த கோடியையும் தேடவில்லை. ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற சிடியைதான் தேடி வருகிறார்கள். சிடி கிடைக்காததால்தான் ரெய்டு தொடர்ந்து வருகிறது. ஜெயா டிவியை விவேக் நிர்வகித்து வருவதால்தான் அவர்களின் உறவினர்கள் வீடுகளை குறிவைத்து இந்த ரெய்டு நடக்கிறது.