குடிநீர் வடிகால் வாரியத் தலைவர் பதவிக்கு குறிவைக்கும் கே.பி. முனுசாமி.. ஆனால்?
வாரியத் தலைவர் பதவியை குறிவைத்து அதிமுகவில் லாபிகள் தொடங்கிவிடதாம். முக்கியத்துவம் இல்லாத வாரியங்கள் ஓபிஎஸ் அணி பக்கம் தள்ளிவிடப்படுகிறதாம்.
சென்னை: தமிழக அரசு அறிவிக்க இருக்கும் வாரியத் தலைவர் பதவிகள் அதிமுகவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. குடிநீர் வடிகால் வாரியத் தலைவர் பதவியை ஓபிஎஸ் அணியின் கேபி முனுசாமி குறிவைத்தாலும் மேற்கு மாவட்டம் தயங்கி வருவதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் முழுமையான ஆதரவு இருப்பதால் அதிமுக ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை என்பதில் கோட்டையாளர்கள் உறுதியாக இருக்கின்றனர். இதனால் கட்சி பதவி, பார் உரிமம், வாரியத் தலைவர் பதவி என அடுத்த கட்ட வேலைகளில் பிசியாக தொடங்கிவிட்டனர்.
சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைந்த உடன் அடுத்தடுத்து இவை அரங்கேற உள்ளன. அதிமுகவின் இரு அணிகள் இணைந்த போது ஓபிஎஸ் தரப்பில், எதுவாக இருந்தாலும் இரு அணிகளுக்கும் சம பங்கு என நிபந்தனை முன்வைக்கப்பட்டது.
அதிருப்தியில் ஓபிஎஸ் அணி
ஆனால் மேற்கு மாவட்ட லாபியோ, கட்சி, ஆட்சி கையை விட்டு போகக் கூடாது என்பதற்காக 70-30 என பேரம் பேசிய ஒப்புக் கொள்ள வைத்தது. இதை ஓபிஎஸ் தரப்பும் ஏற்றது. அணிகள் இணைப்பு முடிந்த நிலையிலும் பேசியபடி எதுவும் நடக்காத நிலையில் ஓபிஎஸ் அணி தலைவர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
பார் உரிமம் நிறுத்தம்
இந்நிலையில் பார் உரிமங்களை ஏற்கனவே நடத்தி வந்தவர்களுக்கு மீண்டும் தர வேண்டாம் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமே அனைத்து மாவட்டங்களிலும் பார் உரிமங்களை வைத்திருந்தவர்கள் சசிகலா ஆதரவாளர்கள்.
பதவிக்காக அடிதடி
இதனால் பார் உரிமங்களை ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்புக்கு பிரித்து கொடுக்கப்பட இருக்கிறது. இதேபோல் வாரியத் தலைவர் பதவிக்கும் அடிதடி உருவாக இருக்கிறது.
முனுசாமி அதிருப்தி
குடிநீர் வடிகால் வாரியம் அல்லது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவர் பதவிகளுக்கு ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர் கே.பி. முனுசாமி முயற்சிக்கிறாராம். ஆனால் மேற்கு மாவட்டமோ, நாங்கள் சொல்கிற வாரியத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறதாம். இதில் முனுசாமி தரப்பு அதிருப்தியில் இருக்கிறதாம்.
கட்சிப் பதவி
இதேபோல் நத்தம் விஸ்வநாதன் தரப்பும் வாரியத் தலைவர் பதவியை எதிர்பார்க்கிறது. வாரியம் அல்லது பார் உரிமம் எது கிடைத்தாலும் ஓகே என்கிறதாம் நத்தம் தரப்பு. வாரியத்தில் எழும் அதிருப்தியை பார் உரிமத்திலும் இரண்டும் கிடைக்காதவர்களுக்கு கட்சி பதவியிலும் இடம் கொடுத்து தாஜா செய்துவிடுவது என்பதுதான் கோட்டையாளர்களின் பிளானாம்.