வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு - விழுப்புரம் கோர்ட்டில் பொன்முடி ஆஜர்!
விழுப்புரம்: திமுக முன்னாள் அமைச்சரான பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆனார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, பேராசிரியர் மணிவண்ணன் ஆகிய 3 பேர் மீது 2002 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை இன்று விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்பு நீதிபதி சுந்தரமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. கோர்ட்டில் பொன்முடி ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக ஒரு சாட்சியிடம் விசாரணை நடைபெற்றது.
இதேபோல் 2012 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது விழுப்புரம் மாவட்ட லஞ்சஒழிப்பு போலீசார் மற்றொரு வழக்கு பதிவு செய்திருந்தார்கள்.
இந்த வழக்கு விசாரணையும் இன்று விழுப்புரம் லஞ்சம், ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கிலும் பொன்முடி ஆஜர் ஆனார். இந்த வழக்கு தொடர்பாக 5 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.