தினகரன் ஒரு வேட்பாளரே இல்லையே.. சுயேட்சைங்க... ஓபிஎஸ் அணியில் ஐக்கியமான ராஜகண்ணப்பன் 'சுளீர்'
முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்தார். ஆர்கே நகரில் மதுசூதனன் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார் ராஜ கண்ணப்பன்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியில் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் இணைந்துள்ளார். ஆர்கே நகர் தொகுதி இடைதேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராஜகண்ணப்பனின் முடிவு ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு கூடுதல் பலமாகப் பார்க்க்கப்படுகிறது.
1991-96 ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ராஜகண்ணப்பன். அப்போது அவர் ஊழலில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டப்பட்டு, சொத்துக்குவிப்பு வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், அந்த வழக்கில் இருந்து அவரும் அவரது குடும்பத்தாரும் விடுவிக்கப்பட்டார்.
அதன்பின், அரசியலில் சற்று ஒதுங்கி இருந்த ராஜ கண்ணப்பன், சசிகலா அணியை ஆதரித்து வந்தார். இந்நிலையில் இன்று ஒ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,'' ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிமுகவை யாராலும் அழித்துவிட முடியாது. அதிமுகவை எந்த கொம்பன் நினைத்தாலும் அழைக்க முடியாது.
எங்கள் ஒரே எதிரி திமுகதான். கட்டப்பஞ்சாயத்து மூலம் கட்சி வளர்க்கும் திமுகவை வீழ்த்துவோம். ஆனால், திமுகவைப் போல் அதிமுகவினர் அடாவடி செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.
எங்களைப் பொறுத்தவரை தினகரன் ஒரு வேட்பாளரே கிடையாது. அவர் ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டுமே. எங்கள் அணி மதுசூதனன் பெரும் வெற்றியடைவார்'' என்று கூறினார்.