விஜயகாந்த் பாணியில் தடாலடி... கலெக்டர் கூட்டத்தில் துப்பாக்கியை தூக்கிய தேமுதிக முல்லைவேந்தன்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் தடாலடிகளைப் போல அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனும் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நடந்து கொண்டார். இந்த கூட்டத்தில் திடீரென துப்பாக்கியை முல்லைவேந்தன் காட்டியதால் பெரும் பீதி ஏற்பட்டது.
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கலந்து கொண்டார். அப்போது பேசிய முல்லைவேந்தன், மாவட்ட நிர்வாகமே முடங்கி கிடக்கின்றது., விவசாயிகள் அதிகாரிகள் வருகைக்காக பல மணிநேரம் காத்து கிடக்க வேண்டியிருக்கு.
சரியான பருவத்திற்கு ஏற்ப விதைகள் கிடைப்பதில்லை, அரசு மானியத்தில் வழங்கும் உரங்கள் வெளியில் மார்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் விவசாயிகள் கூடுதல் விலைக்கு உரங்களை வாங்கவேண்டியுள்ளது. மின் மிகை மாநிலம் என்று தமிழக அரசு சொன்னாலும் விவசாயத்திற்கு மின்சாரம் இல்லை இது உண்மை நிலவரம் என்றார்.
அத்துடன் தமது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிக்கு கடந்த 8 மாதங்களாக லைசென்ஸ் புதுப்பிக்க வேண்டி கேட்டு வருகின்றேன். ஆனால் அதிகாரிகள் காலதாமம் செய்து வருகின்றனர் என்று கூறியவர் சட்டென துப்பாக்கியை காட்டி இதை கூட அரசு கவனிக்க மாட்டேங்குது என்றார்.
முல்லைவேந்தன் திடீரென துப்பாக்கியைக் காட்டியதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதை எதிர்பார்க்காத மாவட்ட ஆட்சியரும் ஆடிப் போனார்.
உடனே போலீசார், தயவு செய்து துப்பாக்கியை கொடுத்துவிடுங்கள் என்று இப்போது முல்லைவேந்தனை நச்சரித்து வருகின்றனர்.