கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் பழ.கருப்பையா !
சென்னை: அதிமுக முன்னாள் சட்டசபை உறுப்பினர் பழ.கருப்பையா, இன்று திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் அக்கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார்.
அ.தி.மு.க. சார்பில் கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பழ.கருப்பையா. இவர் ‘துக்ளக்' பத்திரிகை ஆண்டு விழாவில் பங்கேற்று பேசியபோது அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க.வின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.
மேலும், அமைச்சர்கள் கொள்ளையடித்து தொண்டர்கள் முதல் மாவட்டம், வட்டம் என அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கும் நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் எனக் கூறியிருந்தார். இதையடுத்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அக்கட்சி எம்.எல்.ஏ பழ.கருப்பையா நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார்.
இதையடுத்து பழ. கருப்பையா திமுகவில் சேரக்கூடும் என அப்போதே கூறப்பட்டது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பழ.கருப்பையா கலந்துகொண்டார். அப்போது, பழ.கருப்பையா போன்ற தமிழ் எழுத்தாளர்கள் தொடர்ந்து திமுகவில் இருக்க வேண்டும் என்றார் கருணாநிதி.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை கருணாநிதியை நேரில் சந்தித்து அக்கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார் பழ.கருப்பையா. இந்த விழாவில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவிலிருந்து வெளியேறிய பின்னர் திமுகவையே சுற்றிச் சுற்றி வந்ததாகவும், மனதளவிலும் உடலளவிலும் அப்போதே தாம் திமுகவில் இணைந்துவிட்டதாகவும் கூறினார். மேலும் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர்களுடன் இணைந்து திராவிட இயக்க வளர்ச்சிக்கு தாம் பாடுபடப்போவதாகவும் கருப்பையா தெரிவித்தார்.