2 அணிகளும் இணையும் வாய்ப்பே இல்லை.. முன்னாள் எம்பி ரித்தீஷ் திட்டவட்டம்
சென்னை: பிளவுபட்டுள்ள அதிமுக அணிகள் இணையும் சாத்தியம் இல்லை என்று முன்னாள் எம்பி ரித்தீஷ் கூறினார்.
சென்னை பெசண்ட் நகரில் உள்ள டிடிவி தினகரனை முன்னாள் எம்பி ரித்தீஷ் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
எப்போதும் போல் நாங்கள் தினகரனை பார்க்க வந்தோம். பேசினோம். அவ்வளவுதான். மற்றபடி எது குறித்தும் நாங்கள் பேசவில்லை. அதிமுக அலுவலகத்திற்கு தினகரன் செல்வது குறித்து இதுவரை இன்னும் முடிவெடுக்கவில்லை.
60 நாள் கெடு முடிந்துவிட்ட நிலையில், இனிதான் என்ன செய்வது என்று தினகரன் முடிவு செய்வார். பின்னர் அறிவிப்பார். கட்சி காப்பாற்றப்பட வேண்டும். ஆட்சி நல்ல முறையில் நடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கட்சி சற்று தொய்வில் இருக்கிறது. அது சிறப்பாக நடக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம்.
கட்சி பலமாகத்தான் இருக்கிறது. ஆனால் தலைமை இல்லாமல்தான் தொண்டர்கள் தவித்து வருகின்றனர். அதனால் தினகரன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பொதுச் செயலாளர் சசிகலா சிறையில் இருப்பதால் தினகரன்தான் தலைமையாக இருந்து செயல்பட வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர்.
தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியம் தெரியவில்லை. இணைந்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் அனைவரின் விருப்பம் என்று ரித்தீஷ் கூறினார்.