முத்துக்குமாரசாமி தற்கொலை: அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்திலுக்கு ஜாமீன் கிடைக்குமா?
மதுரை: நெல்லை வேளாண் அதிகாரி எஸ்.முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், தலைமைப் பொறியாளர் செந்திலும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நாளை நடைபெற உள்ளது.
நெல்லை வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பாக வேளாண்மைத்துறை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைத்துறை தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தலைமைப்பொறியாளர் செந்தில், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஜாமீன் கேட்டு, நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, தலைமைப்பொறியாளர் செந்தில் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சிபிசிஐடி போலீஸாரிடம் முத்துக்குமாரசாமி மனைவி அளித்த வாக்குமூலத்தில், பிப்ரவரி 20ஆம் தேதி தன் கணவர் இரவில் தூக்கமில்லாமல் தவித்ததாகவும், அவரிடம் கேட்டபோது அலுவலகத்தில் தனக்கு அதிக தொல்லைகள் தருவதாகவும் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த வாக்கு மூலம் ரயில்வே போலீஸாரிடம் முத்துக்குமாரசாமி அளித்த வாக்கு மூலத்துக்கு முரணாக உள்ளது.
முத்துக்குமாரசாமியின் நண்பர்கள் ராஜகோபால், அசோக்குமார் அளித்த வாக்குமூலத்தில், முத்துக்குமாரசாமி தங்களிடம் வேளாண்மைத் துறையில் 11 ஓட்டுநர்கள் நியமனம் செய்ததற்கு ரூ.11 லட்சம் தர வேண்டும் என தலைமைப் பொறியாளர் செந்தில் கேட்டு துன்புறுத்தி வருவதாகவும், இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தான் கூறியதாகவும், அதை கேட்ட ஆட்சியர் கவலைப்பட வேண் டாம், விஷயத்தைதான் பார்த்துக் கொள்வதாகவும் கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆட்சியர் கவலைப்பட வேண்டாம் என கூறியிருந்தும், முத்துக்குமாரசாமி ஏன் தற்கொலை செய்ய வேண்டும். இந்த வழக்கை ரயில்வே போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது முத்துக்குமாரசாமியை மேல் அதிகாரிகள் துன்புறுத்தியதாக யாரும் கூறவில்லை. சிபிசிஐடி போலீஸார்தான் வழக்கின் திசையை மாற்றியுள்ளனர்.
முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. முத்துக் குமாரசாமியின் மரணம் விபத்தாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. நான் ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளேன். ஏப். 5ஆம் தேதி முதல் சிறையில் உள்ளேன். மேலும் சிறையில் இருந்தால் உடல் நலம் பாதிக்கப்படும். எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவும், தலைமை பொறியாளர் செந்தில் ஜாமீன் மனுவும் நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான அரசு வக்கீல் ராஜராஜன் ஜாமீன் வழக்கில் அரசு தலைமை வக்கீல் ஆஜராக இருப்பதால் நாளை விசாரணையை ஒத்திவைக்குமாறு நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில் ஆகியோரது ஜாமீன் மனுவை நாளை ஒத்திவைத்து நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவிட்டார். முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் இவர்கள் இருவருக்கும் ஜாமீன் கிடைக்குமா? என்பது நாளைய விசாரணையில் தெரியவரும்