இனி நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கட்டாயம்– உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டின் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக இருக்கும் நடத்துநர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முஜிபூர் ரஹ்மான் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த மாதம் 2 ஆம் தேதி அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர், இளநிலைப் பொறியாளர், இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர் போன்ற பணியிடங் களை நேர்முகத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான விண்ணப் பங்கள் வரவேற்கப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டது.
நான் இளநிலை பொறியாளர் பதவிக்கு விண்ணப்பித்தேன். எனது வயது வரம்பை தளர்த்தி நேர்முகத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது,.
உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் இந்த மனுவை விசாரித்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, "அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் எந்தப் பணியிடமாக இருந் தாலும் நேர்முகத் தேர்வு மட்டுமல்லாமல் எழுத்துத் தேர்வும் நடத்தப் பட வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் 2 ஆம் தேதி நேர்முகத் தேர்வு மூலம் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அரசுப் போக்குவரத் துக் கழகம் சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது.
ஏற்கெனவே தேர்வு செய்யப்பட் டவர்களின் நியமனத்தை ரத்து செய்யக் கூடாது என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேநேரத்தில் தற்போது பணி நியமனத்துக்கான தேர்வு நடந்தாலும், நேர்முகத் தேர்வு மட்டுமல்லாமல் எழுத்துத் தேர்வும் கட்டாயம்.
நவம்பர் 2 இல் வெளியிட்ட விளம்பரத்தில் உள்ளபடி பணிநியமனம் செய்யும்போது எழுத்துத் தேர்வு கண்டிப்பாக நடத்த வேண்டும்.
இந்த உத்தரவின் நகலை, ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவுடன் சேர்த்து தமிழக போக்குவரத்துத் துறை செயலருக்கு அனுப்ப வேண்டும்.
அவர், அரசுப் போக்குவரத்துக் கழக பணி நியமனத்தில் எழுத்துத் தேர்வு கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநருக்கும் உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.