2500 வருடங்களுக்கு முன்பு கொடுமணல் எப்படி இருந்துச்சு தெரியுமா.. பரபர தகவல்
கொடுமணலில் வணிக மையம் இருந்ததாக அகழ்வாராய்ச்சி முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஈரோடு: கி்மு 500 ஆண்டுகளுக்கு முன்பாக பயன்படுத்தப்பட்ட வணிக முத்திரைகள் கொடுமணலில் இருந்திருக்கின்றன என்று அகழ்வாராய்ச்சியில் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொடுமணல் கிராமம். சேரநாட்டின் இந்த கிராமம் பெரும் வணிக நகரமாக இருந்ததை ஈரோட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் புலவர் ராசு மற்றும் செல்வி முத்தையா ஆகியோர் கடந்த 1961 ம் ஆண்டில் கண்டு பிடித்தனர்.
இதனையடுத்து மத்திய தொல்லியல் துறையின் சார்பில் பல்வேறு கட்ட அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நகரமானது கரூர் மாவட்டம் முசிறி மற்றும் பட்டினம் நகரத்தை இணைக்கும் வியாபார தளமாக விளங்கியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி
மேலும் இரும்பு ஆலை செயல்பட்டு வந்ததும், பழங்கால மக்கள் பயன்படுத்தி வந்த மண்பாண்டங்கள், அணிகலன்கள், முதுமக்கள் தாழி போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஆய்வில் 50 ஹெக்டேர் பரப்பளவில் நகரமும் 10 ஹெக்டேர் பரப்பளவில் மக்கள் வசித்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. இந்த நிலையில் கடந்த ஜனவரி 8-ம் தேதி முதல் பெங்களுருவை சேர்ந்த இந்திய தொல்லியல் துறையினர் மீண்டும் அகழ்வாராட்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளில் இதுவரை 38 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிறப்பு மிக்க இடம்-கொடுமணல்
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தொல்லியல்துறை அகழ்வாய்வு பிரிவு கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், கடந்த 4 மாதங்களாக அகழ்வாராட்சி பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும்,கொடுமணல் ஒரு சிறப்பு வாய்ந்த தொல்லியல் இடம் என்றார். மேலும் கொடுமணலில் பல வரலாற்று சிறப்பு மிக்க பொருட்கள் கிடைத்துள்ளதாகவும், இதில் முக்கியமாக பானை ஓடுகளின் மீது பொறிக்கப்பட்டுள்ள அ,ஆ,இ,ஈ பிராமிய எழுத்துகள் உள்ளதாகவும் கூறினார்.
சுடுமணல் முத்திரைகள்
இதேபோல். இவை கி.மு 5 ம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் அகழ்வாராட்சிகள் 1௦௦க்கும் மேற்பட்ட கரித்துகள்கள் கிடைத்துள்ளதுடன், வணிகர்கள் முதன்முறையாக பயன்படுத்திய சுடுமணலால் செய்யப்பட்ட முத்திரையையும் கண்டுபிடித்துள்ளதாகவும் கூறினார். இது தவிர தங்கம், செம்பு, ஆபரணங்கள் கற்கால கருவிகள், 4 ஈமக்குழிகள், கண்டுபிடிக்கப்பட்டு, அவைகளில் இரு அறைகள் கொண்ட கல்லறை காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பாதுகாப்பு சின்னம்-அறிவிப்பு தேவை
மனித எலும்புக்கூட்டின் எலும்புகளும் கிடைத்துள்ளதால், அவை அனைத்தும் விரைவில் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்படும் என்றும் ஸ்ரீராமன் கூறினார் . கொடுமணலில் கைப்பற்றப்பட்ட எழுத்துகளின் காலத்தை நிர்ணயம் செய்வதற்கான ஆய்வு வரும் ஜூலை வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. என்றாலும் வரலாற்று சிறப்பு மிக்க கொடுமண,ல் அகழாய்வு களத்தை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கைள் எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது.