2ஜி வழக்கு.. புத்தகம் வெளியிட காத்திருக்கும் ஆ. ராசா!
2ஜி வழக்கு குறித்து தன்னுடைய பக்கத்து நியாயங்களை புத்தகமாக வெளியிட இருக்கிறார் ஆ. ராசா
சென்னை: 2ஜி வழக்கு குறித்து தன்னுடைய பக்கத்து நியாயங்களை புத்தகமாக வெளியிட இருக்கிறார் ஆ. ராசா.
இந்த புத்தகம் 2016ம் வருடம் நவம்பர் மாதமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது 2ஜி வழக்கில் ராசா மற்றும் கனிமொழி குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு வெளிவந்து இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த புத்தகம் மீதான எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்து இருக்கிறது.
இந்த புத்தகம் பல்வேறு காரணங்களுக்காக வெளியிடப்படாமல் இருக்கிறது. ஏற்கனவே இந்த புத்தகம் வெளியே வந்தால் பல உண்மைகள் வெளி வரும் என்று கூறப்பட்டது. இந்த தீர்ப்பின் காரணமாக தற்போது புத்தகம் எப்போது வெளிவரும் என்று பலரும் எதிர்பார்க்க தொடங்கிவிட்டார்கள்.
ராசாவின் புத்தகம்
2014ம் ஆண்டு 2ஜி பிரச்சனை உச்சத்தில் இருந்த சமயம் ஆ.ராசா அந்த வழக்கு குறித்து புத்தகம் எழுதப்போவதாக கூறினார். அந்த புத்தகத்திற்கு ''தி புக் இன் மை டிபஃன்ஸ்'' என்று பெயரிடப்பட இருந்தது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும் இந்த புத்தகத்தில் ஆ.ராசா தன்னுடைய பக்கத்து நியாயங்கள் குறித்து பேசுவேன் என்று கூறியிருந்தார். மேலும் 2ஜி வழக்கு ஏன் ஊழல் இல்லை என்று அதில் எழுதப்போவதாக கூறினார்.
புத்தகம் தள்ளிப்போனது
இந்த புத்தகம் 2016 நவம்பரில் வெளியிடப்பட இருந்தது. ஆனால் இந்த புத்தகத்தை வெளியிட முடிவு செய்து இருந்த பதிப்பகம் திடீர் என்று பின்வாங்கியது. புத்தகத்தை வெளியிட்டால் பதிப்பகத்திற்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்று இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஏற்கனவே அந்த பதிப்பகம் வெளியிட்ட சில புத்தகங்கள் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி இருக்கிறது. மிகவும் எதிர்பார்த்த அந்த புத்தகம் வெளிவராத காரணத்தால் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.
தீர்ப்பு
தற்போது 2ஜி வழக்கிற்கான தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. இதில் ஆ.ராசா கனிமொழி உட்பட யாருமே குற்றவாளிகள் இல்லை என்று தீர்ப்பாகி இருக்கிறது. இதனால் இத்தனை வருடமாக இந்தியா பேசிக்கொண்டிருந்த பெரிய ஊழல் வழக்கு முடிவிற்கு வந்துள்ளது. இதன் காரணமாக ராசா எழுதும் புத்தகத்திலும் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறது.
எப்போது வரும்
தற்போது ராசா குற்றமற்றவர் என்பதால் இந்த புத்தகத்தின் உள்ளடக்கத்தில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்படலாம். சமயங்களில் அப்படியே கூட ராசா புத்தகத்தை வெளியிடலாம். ஒவ்வொரு வருடமும் அரசியல் சம்பந்தமான புத்தகம் ஒன்று வெளியாகி புயலை கிளப்பும். அதுபோல் இந்த புத்தகமும் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. தீர்ப்பு சாதகமாக வந்து இருப்பதால் ராசா விரைவில் இந்த புத்தகத்தை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கலாம்.