பாஸ்போர்ட் காலாவதியானதை கவனிக்காததால் விபரீதம்! மஸ்கட் நபர் சென்னை விமான நிலையத்தில் கைது!!
சென்னை: காலாவதியான பாஸ்போர்ட்டில் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த பேன்சி கடைக்காரர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை மஸ்கட்டில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது கன்னியாகுமரி மாவட்டம் பிறைகுடியைச் சேர்ந்த பிரபாகரன்( 45) என்பவரின் பாஸ்போர்ட் காலாவதியாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரனை, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதிகாரிகளிடம் பிரபாகரன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
20 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக மஸ்கட் சென்றிருந்தேன். அங்குள்ள ஒருவருடன் சேர்ந்து பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தேன். கடந்த ஆண்டு எனது குடும்பத்தை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பினேன். பின்னர் நானும் பேன்சி ஸ்டோர் கடையை மூடிவிட்டு சென்னை திரும்ப இருந்தேன்.
அப்போதுதான் எனது பாஸ்போர்ட் கடந்த ஜூன் மாதத்தோடு காலாவதியாகி இருந்ததை பார்க்க நேரிட்டது. காலாவதியான பாஸ்போர்ட்டில் பயணித்தால் மஸ்கட் விமான நிலைய அதிகாரிகள் கைது செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள் என்பதால் அங்கு உள்ள ஏஜெண்டுகளிடம் பணத்தை கொடுத்து போலியான பாஸ்போர்ட்டில் எனது புகைப்படத்தை ஒட்டி வாங்கினேன்.
மஸ்கட்டில் இருந்து விமானத்தில் பக்ரைன் வழியாக சென்னை வந்தேன். விமானம் பக்ரைனில் இருந்தபோது போலியான பாஸ்போர்ட்டில் சென்னை வந்தால் பிடித்துவிடுவார்கள் என்ற அச்சத்தால், விமானத்தில் உள்ள கழிவறையில் அதை கிழித்து போட்டுவிட்டேன். சென்னை வந்தபோது காலாவதியான பாஸ்போர்ட்டை பார்த்துவிட்டு அதிகாரிகள் சும்மா விட்டுவிடுவார்கள் என்று நினைத்தேன்.
ஆனால் பாஸ்போர்ட்டு காலாவதியாகி இருந்ததை குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர். இவ்வாறு தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.