பள்ளிவாசலில் வெடிபொருள் கண்டெடுப்பு.. தொழுகைக்கு வந்தவர்கள் அதிர்ச்சி.. மதுரையில் பரபரப்பு
காளவாசல் அருகில் உள்ள பள்ளி வாசலில் வெடிபொருள் அடங்கிய பந்து 2 கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை: காளவாசல் அருகில் உள்ள பள்ளிவாசலில் ஒன்றில் வெடிபொருள் நிரப்பப்பட்ட பந்துகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மதுரை காளவாசல் பகுதியில் பிரசித்தி பெற்ற பள்ளி வாசல் ஒன்றுள்ளது. இங்கு ஏராளமான முஸ்லிம் பெருமக்கள் இங்கு வந்து தொழுகை நடத்திச் செல்வது வழக்கம். மிகவும் பழமையான இந்தப் பள்ளி வாசலில், இன்று காலையில் சிறப்பு தொழுகைக்கு முஸ்லிம்கள் வந்தனர்.
அப்போது, பள்ளிவாசல் தார்ஷெட் போடப்பட்ட வளாகத்தில் 2 பிளாஸ்டிக் பந்துகள் இருப்பதைத் தொழுகைக்கு வந்தவர்கள் பார்த்துள்ளனர். அந்தப் பந்துகளில் வெடிபொருள் நிரப்பப்பட்டுள்ளது போன்று இருந்ததால் சந்தேகம் கொண்ட அவர்கள், ஒரு பந்தை எடுத்து அதனை தீ வைத்துள்ளனர்.
அப்போது அந்தப் பந்து தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் வெடிபொருள் நிபுணர்களுடன் பள்ளிவாசலுக்கு விரைந்தனர். பின்னர், பள்ளி வாசல் முழுவதுமாக சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனைக்கு வேறெதுவும் வெடிபொருள் சிக்கவில்லை. அதனால் மற்றொரு பிளாஸ்டிக் பந்தை கொண்டி சோதனைச் செய்து பார்த்தனர் போலீசார். அதில் பட்டாசுக்கும் பயன்படுத்தப்படும் வெடிமருந்து நிரப்பப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பந்து எப்படி பள்ளிவாசல் வளாகத்திற்கு வந்துள்ளது. சமூக விரோதிகள் யாராவது இதனைப் பள்ளிவாசலுக்கு எறிந்துள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.