வெடிபொருட்கள் பதுக்கல்: கல் குவாரி உரிமையாளர் கைது
சாத்தூர்: சாத்தூர் அருகே அனுமதி இன்றி வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்த குவாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கங்கரைக்கோட்டை என்ற கிராமத்தில் தூத்துக்குடி மாவட்டம் டி.அருணாசலபுரத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. அங்கு அரசு அனுமதியுடன் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அங்கு சட்ட விரோதமாக வெடி பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரிக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து அவர் ஏழாயிரம்பண்ணை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட கல்குவாரிக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு சட்ட விரோதமாக பாறைகளை உடைப்பதற்காக உபயோகப்படுத்தும் 88 டெட்டனேட்டர்கள், 44 ஜெலட்டின் குச்சிகள், 120 மீட்டர் வயர் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை வழக்கமான அளவை விட கூடுதலாக இருந்ததால் அது பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கருதப்பட்டு உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர் வெள்ளைச்சாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.