ஒரு வாரத்துக்குப் பின் மீண்டும் சீரானது ரயில்வே போக்குவரத்து
சென்னை: சென்னையில் சென்ற வாரம் தொடர்ந்து பெய்த கனமழையால் சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் நேற்று முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு வழித்தடங்கள் தண்டவாளம் தெரியாத அளவுக்கு மழை நீரில் மூழ்கின.
மேலும் ஒருசில இடங்களில் மழை நீர் காரணமாக தண்டவாளங்கள் சேதமடைந்தன. இதனால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில், சேதம் அடைந்த தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டு, சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து வழக்கம்போல எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டன. சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் சில ரயில்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று புறநகர் மின்சார ரயில்களும் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்பட்டன. அரசு, தனியார் அலுவலகங்கள், வங்கிகள் கனமழைக்கு பின்னர் வழக்கம்போல் செயல்படத்தொடங்கியதால் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர் ரயில் சேவை முழுமையாக தொடங்கியதால், அனைத்து மின்சார ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு ரயில்களில் கடுமையான கூட்ட நெரிசல் காணப்பட்டது.