கருணாநிதி உடல்நிலை எப்படி உள்ளது? காவிரி மருத்துவமனை விளக்கமான அறிக்கை
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை சீராகி வருவதாகவும், ஞாயிற்றுக்கிழமை உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பிறகு அவரது உடல்நிலை சீராகி வருவதாகவும் காவிரி மருத்துவமனை இன்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தைவிட கொஞ்சம் பெரிய செய்திக்குறிப்பாக இது உள்ளது.
காவிரி மருத்துவனை இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, 28ம் தேதி ரத்த அழுத்த குறைபாடு காரணமாக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் வைத்து சிகிச்சையளித்த பிறகு அவரது உடல்நிலை சீரடைந்தது. 29ம் தேதி, மூச்சுவிடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக, கருணாநிதி உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைகளுக்கு கருணாநிதி உடல்நிலை ஒத்துழைத்ததையடுத்து, படிப்படியாக அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
வயது காரணமாக மொத்தத்தில் அவரது ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள நலிவு காரணமாக, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீடிக்க வேண்டியது அவசியம். கருணாநிதியின் கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டம் ஆகியவை சீராக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல் உறுப்புகள் அனைத்தும் சிகிச்சைக்கு நல்ல வகையில் ஒத்துழைத்து வருகின்றன. இவ்வாறு காவிரி மருத்துவமனை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.