சென்னை உட்பட 12 மாவட்டங்களில் தீவிர அனல் காற்றுக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: இனி வரும் சில நாட்களுக்கு வட தமிழக மாவட்டங்களில், அதி தீவிர அனல் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்குமாறும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள வானிலை மையம், மேற்கத்திய காற்று வலுவாக வீசுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.
இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,வேலுர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், புதுச்சேரி உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் 3 நாட்களுக்கு அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 4 முதல் 6 டிகிரி வரை, வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் கூறியுள்ளது.
இதனால் அனல் காற்றிலிருந்து தப்பிக்க மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கும்படி வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
தலைநகர் சென்னையை பொறுத்த வரை வானம் சற்று மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாக கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
அதே போல வெப்பசலனம் மற்றும் தென்மேற்கு பருவ மழை காரணமாக கோவை, நீலகிரி, தேனி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை திருப்புவனத்தில் 4 செமீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.