கூவத்தில் அடித்துச் சென்று நாகையில் கரை ஒதுங்கிய ஆட்டோ டிரைவர் உடல்: ஃபேஸ்புக் மூலம் அடையாளம் காணல்
நாகை: தரங்கம்பாடி டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் அருண் குமார் என்பவர் கரை ஒதுங்கிய நபரின் சடலத்தை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டு அவரின் உறவினர்களை கண்டுபிடித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு சுதந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ்(35). ஆட்டோ டிரைவர். அவர் கடந்த 2ம் தேதி கூவத்தில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் கூவத்திற்கு சென்ற ஜெயராஜை காணவில்லை என அவரது உறவினர்கள் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையே கடந்த 6ம் தேதி நாகை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் ஒரு உடல் படுமோசமாக சேதமடைந்த நிலையில் ஒதுங்கியது.
அந்த உடல் பொரயாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தரங்கம்பாடி டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் அருண் குமார் அந்த சடலத்தை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.
ஃபேஸ்புக்கில் அந்த புகைப்படங்களை பார்த்த சென்னையைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் அருண் குமாரை தொடர்பு கொண்டு கரை ஒதுங்கிய உடல் தனது உறவினர் ஜெயராஜுடையது என்றார். இதையடுத்து ஜெயராஜின் மனைவி, 2 மகன்கள் மற்றும் 50 உறவினர்கள் நேற்று தரங்கம்பாடி சென்றனர்.
ஜெயராஜ் தனது வலது கையில் மனைவியின் பெயரையும், தோள்பட்டையில் மூத்த மகனின் பெயரையும், மார்பில் இரண்டாவது மகனின் பெயரையும் பச்சை குத்தியிருந்தார். அது தான் அவரது உடலை உறவினர்கள் அடையாளம் காண உதவியது.