என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார் சரோஜா... வேலையை விடமாட்டேன் - அதிகாரி மீனாட்சி
அமைச்சர் சரோஜா தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், தனக்கு பாதுகாப்பில்லை என்றும் சமூக நலத்துறை அதிகாரி மீனாட்சி புகார் கூறியுள்ளார்.
சென்னை: எந்த சூழ்நிலையிலும் வேலையை விட மாட்டேன் என்றும் அமைச்சர் சரோஜா தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதால் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரியாக உள்ள மீனாட்சி கூறியுள்ளார்.
தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரியாக உள்ள அதிகாரி மீனாட்சி குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சிறப்பாக செயல்பட்டதால் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசுப் பணியை பெற்றார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிகாரி மீனாட்சியை அந்தப் பணியை விட்டு செல்லுமாறு அமைச்சர் சரோஜா தன்னை மிரட்டியதாக மீனாட்சி நேற்று பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா முதலில் நன்னடத்தை அதிகாரி மூலம் தொந்தரவு கொடுத்ததாகவும், அதன் பின்னர் தன்னை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிற்கே அழைத்து மிரட்டல் விடுத்ததாகவும் மீனாட்சி நேற்று மாலை பரபரப்பு புகார் தெரிவித்தார்.
மிரட்டிய அமைச்சர்
இந்த நிலையில் அமைச்சர் சரோஜா மீது போலீசில் லஞ்ச புகார் அளித்த மீனாட்சி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் சரோஜா என்னை வீட்டுக்கு அழைத்தார். அப்போது லஞ்சம் கொடுக்காமல் வேலை வாங்கிவிட்டாய் என கூறினார்.
லஞ்சம் கேட்டார்
சரோஜா என்னிடம் ரூ.30 லட்சம் கேட்டார். பணம் தராவிட்டால் பணி நிரந்தரம் செய்ய மாட்டோம் எனவும் சரோஜா கூறினார். சரோஜாவுடன் அவரது கணவரும் எனக்கு மிரட்டல் விடுத்தார். பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். எந்த சூழ்நிலையிலும் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்றும் மீனாட்சி கூறினார்.
ஆதாரம் உள்ளது
சரோஜா எனது தந்தையிடம் ரூ. 10 லட்சம் லஞ்சம் வாங்கியதற்கான வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் உள்ளன. தனக்கு பணி பாதுகாப்பு வேண்டும். உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் மீனாட்சி கூறியுள்ளார்.
அமைச்சர் தங்கமணியிடம் புகார்
தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கமணியிடம் எற்கனவே புகார் அளித்துள்ளேன். இன்று நேரடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். அமைச்சர் மீது மட்டுமே புகார் அளித்ததாகவும், அரசுக்கு எதிராக புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.