8 நாள் ஊதியம் பிடித்தம்.. தலைமைச் செயலகம் முற்றுகை.. பிரிகால் ஆலை தொழிலாளர்கள் கைது
8 நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதால் கோவை பிரிகால் ஆலைத் தொழிலாளர்கள் சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: கோவை பிரிகால் ஆலை ஊழியர்கள் திடீரென தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பிரிகால் ஆலை நிர்வாகம், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு 8 நாட்களுக்கான ஊதியத்தை பிடித்தம் செய்துள்ளது. அதனை முறைப்படி ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதனை நிர்வாகம் செய்ய மறுத்துவிட்டது.
இந்நிலையில், பிரிகால் ஆலை ஊழியர் சென்னை தலைமைச் செயலகம் முன் ஒன்று கூடினர். பின்னர், தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தின் போது பிடிக்கப்பட்ட தங்களது 8 நாள் ஊதியத்தை பெற்றுத் தர வழி வகை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள், தலைமைச் செயலகத்தில் நுழைய முயன்றதால் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். சட்டசபை நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் திடீரென முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.