நீட் தேர்வில் தோல்வி.. அடுத்தடுத்து தற்கொலை செய்த 2 மாணவிகள்.. அதிர்ச்சியில் தமிழக மக்கள்
Recommended Video
பட்டுக்கோட்டை: நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் ரிதுஸ்ரீயை தொடர்ந்து மற்றொரு மாணவியும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுகோட்டையை சேர்ந்த மாணவி வைஸ்யா என்பவர், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த இரு தற்கொலை நிகழ்வுகளும் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் இன்று நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடையாததால், தமிழகத்தை சேர்ந்த இரு மாணவிகள் அடுத்தடுத்து இன்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் உட்படநாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வில் பெறும் மதிபெண்களின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தாலும் பல போராட்டங்கள் நடந்திருந்தாலும் இறதியில் வேறு வழியன்றி நீட்டை கடந்த சில ஆண்டுகளாக ஏற்றுக்கொண்டு அதனை எழுதி வருகிறார்கள் தமிழக மாணவர்கள்
ஒரே ஒரு மதிப்பெண்ணில் நீட் தேர்வில் தோல்வி.! தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி
2019-2020-ம் கல்வியாண்டிற்கான மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவு தேர்வு கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஸா மாநிலத்தில் மட்டுமே நீட் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. அம்மாநில மாணவர்களுக்கு தனியாக 20-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது.
சுமார் 15.19 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 14.10 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று www.nta.ac.in, www.ntaneet.nic ஆகிய இணையதளங்களில் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டது நடப்பாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 9.01 சதவீதம் அதிகமாகும்.
இந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத திருப்பூரை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரிதுஸ்ரீ 12-ம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் எடுத்துள்ள நிலையில், நீட் தேர்வில் தோல்வியுற்றதால் இந்த துயர முடிவை எடுத்ததாக கூறப்பட்டது
மேலும் நீட்டில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் இவர் தோல்வியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த துயர சம்பவத்தின் வேதனை துவங்கிய அடுத்த அரை மணி நேரத்தில், மற்றொரு தற்கொலை சம்பவம் நீட்டால் தமிழகத்தில் நடந்துள்ளது தமிழக மக்களை மேலும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
நீட் தேர்வை எழுதியிருந்த பட்டுக்கோட்டையை சேர்ந்த மாணவி வைஸ்யா என்பவர், அத்தேர்வில் தோல்வியுற்றுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழகமே வேண்டாம் என அலறிய நீட் தேர்வால் தற்போது அடுத்தடுத்து இரு மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.