ப்ளஸ் 2 தேர்வில் ஃபெயிலா?, மார்க் குறைவாக வாங்கியுள்ளீர்களா?: கவலை வேண்டாம்
சென்னை: ப்ளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கியவர்களும், தோல்வி அடைந்தவர்களும் மனம் தளர வேண்டாம்.
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த ஆர்த்தி மற்றும் ஜஸ்வந்த் ஆகியோர் 1,200க்கு 1,195 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலாவதாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்ச்சி அடைந்த மாணவ, மாணவியரில் பலருக்கு தாங்கள் எதிர்பார்த்தபடி மதிப்பெண்கள் வந்திருக்காது. சிலர் தங்களுக்கு பிடித்த பாடங்களில் ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்கள் வித்தியாசத்தில் சென்டத்தை தவற விட்டு கவலையில் இருக்கலாம்.
சில மாணவ, மாணவியர் முயற்சி செய்தும் தேர்வில் தோல்வி அடைந்திருக்கலாம். தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், குறைந்த மதிப்பெண்கள் வாங்கியவர்கள் மனம் தளரக் கூடாது. இதுவே வாழ்க்கையின் முடிவு அல்ல. தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம்.
குறைந்த மதிப்பெண் வாங்கியவர்கள் மனதை தேத்திக் கொண்டு அதற்கேற்ற படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். எந்த படிப்பையும் குறைத்து மதிப்பிடக் கூடாது மாணவ செல்வங்களே. மதிப்பெண்கள் வெறும் எண்களே. அதையே நினைத்து அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.
குழந்தைகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்திருந்தால் பெற்றோர்கள் அவர்களை ஆர்த்தி, ஜஸ்வந்தோடு ஒப்பிட்டு நோகடிக்க வேண்டாம். அவர்கள் அந்த வேதனையில் அவசரப்பட்டு ஏதாவாத முடிவு எடுத்த பிறகு அம்மா போச்சே, அய்யா போச்சே என்று புலம்ப வேண்டியது வரும்.