சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் போலி வங்கிக்கணக்குகள் மூலம் 150 கோடி டெபாசிட்
சேலத்தில் மத்திய கூட்டுறவு வங்கியில் போலி வங்கிக்கணக்குகள் மூலம் 150 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த சோதனையில், பல போலி வங்கி கணக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக இன்றும் சோதனை மேற்கொண்டுள்ளனர். தொடக்க வேளாண்மை வங்கிகளில் கோப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதிக டெபாசிட் உள்ள வங்கியாக உள்ளது. மாவட்டம் முழுவதும், 64 கிளைகள் உள்ளன. சேலம் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவராக உள்ள இளங்கோவன் வங்கி தலைவர் பொறுப்பை வகித்து வருகிறார்.
கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவை என்று அறிவித்தார். நவம்பர் 9ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நவம்பர் 10ம் தேதியில் இருந்து வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது. நவம்பர் 15ம் தேதி வரை பல நூறு கோடி ரூபாய் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளை கணக்குகளில் டெபாசிட் செய்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதையடுத்து புதன்கிழமை மாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அங்கிருந்த கூட்டுறவு உயர் அலுவலர்கள் மூலம் அனைத்து கிளைகளிலும் டெபாசிட் செய்தவர்களின் கணக்குகளை, உடனடியாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்துக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, 64 வங்கி கிளை அலுவலர்களும், தங்களது கணக்கு புத்தகங்களை கொண்டு வந்து, வங்கி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இவற்றை சோதனை மற்றும் ஆய்வு செய்யும் பணியில், தொடர்ந்து வருமானவரித்துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.
இந்தப் போலிக் கணக்குகள் மூலமாக ரூ.150 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டிருக்கலாம் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணையின் போது வங்கியிலிருந்து இது தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றின் உதவியுடன் மேற்கொண்டு விசாரணையைத் தொடரவிருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தொடக்க வேளாண்மை வங்கிகளில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணம் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.