போலி முகவரி கொடுத்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் "சீட்" பெற்ற கேரள மாணவர்கள்!
தமிழகத்தில் நடைபெற்று வரும் மருத்துவ கலந்தாய்வில் போலியான இருப்பிடச் சான்றிதழ் அளித்து மருத்துவ படிப்பில் சேர இடம்பெற்ற அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: நீட் அடிப்படையிலான மருத்துவ கலந்தாய்வில் கேரள மாணவர்கள் 7 பேர் போலியான முகவரியை கொடுத்து தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர முயற்சித்ததும், அதில் 3 பேர் சேர்ந்ததும் தெரியவந்தது.
நீட் இருக்கா இல்லையா , விலக்கு கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பம் ஒரு வழியாக தீர்ந்து நீட் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது. இந்நிலையில் இன்று ஓமந்தூரார் தோட்டத்தில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வுக்கு கேரளாவை சேர்ந்த சில மாணவர்கள் வந்தனர்.
அவர்களது இருப்பிட சான்றிதழை சரிபார்த்த போது அவர்கள் கேரளாவில் நடைபெற்ற கவுன்சலிங்கிலும் கலந்து கொண்டது தெரியவந்தது. விசாரணையில் போலி இருப்பிடச் சான்றிதழ் பெற்று அதை வைத்து தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர முற்பட்டது தெரியவந்தது. மொத்தம் 7 மாணவர்கள் போலியாக முகவரி சான்றிதழ் அளித்ததும் அதில் 3 பேருக்கு மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மற்ற 4 பேருக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. பொதுவாக இருப்பிடச் சான்றிதழானது 5 ஆண்டுகள் ஒரே இடத்தில் வசித்தால் மட்டுமே வழங்கப்படும். இவ்வாறு இவர்களுக்கு போலியாக சான்றிதழ் வழங்கிய அதிகாரி குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்த கேரளாவை சேர்ந்த ஆசிப் சுலைமான் என்ற மாணவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள போலீஸார் அவர் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.