தர்மபுரியில் டுபாகூர் பேங்க்... 1.60 லட்சம் அபேஸ்... 4 பேர் கைது
தர்மபுரி: தனியார் வங்கி பெயரில் சில எழுத்துக்களை கூடுதலாக சேர்ந்து போலி வங்கி நடத்திய 4 பேரை தர்மபுரி போலீசார் கைது செய்துள்ளனர். தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று கடந்த 2004ம் ஆண்டில் இருந்து எஸ் வங்கி இந்தியாவில் இயங்கி வருகிறது. நாடு முழுவதும் இதற்கு பல்வேறு கிளைகள் உள்ளன. இந்த எஸ் என்ற எழுத்துக்களுடன் ஏபிஎஸ் என்ற எழுத்துக்களையும் சேர்த்து எஸ் ஏபிஎஸ் வங்கி என்ற பெயரில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி எதிரில் போலி வங்கி ஒன்று கடந்த ஒருமாத காலமாக இயங்கி வந்திருக்கிறது.
இந்த தகவல்களை அறிந்து கொண்ட எஸ் வங்கியின் சேலம் கிளை மேலாளரும் துணைத் தலைவருமான சசிக்குமார், போலி வங்கிக்கு நேரில் சென்று பார்வையிட்டு வந்துள்ளார். அப்போது இந்த வங்கி தங்கள் வங்கியின் பெயரில் போலியாக செயல்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து, போலி வங்கி குறித்து சசிக்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்தார். இதைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர், தீவிர விசாரணை மேற்கொண்டு 4 பேரை கைது செய்துள்ளனர்.
பென்னாகரம் கூர்க்காம்பட்டியைச் சேர்ந்த சோமசுந்தரம், பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த பாலாஜி, நாமக்கல் மாவட்டம், தடங்கானூரைச் சேர்ந்த சுந்தரேசன், இலக்கியம்பட்டியைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் முருகேசன் ஆகிய நால்வர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலி வங்கி ஆரம்பித்த ஒரே மாதத்தில் 83 வாடிக்கையாளர்களை பெற்று சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை மக்களிடம் இருந்து வசூலித்துள்ளனர் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.