போலி சர்டிபிகேட்: 14 பல்கலைக்கழகங்கள் உடந்தை… ரூ.100 கோடி சுருட்டிய சண்முகசுந்தரி
சென்னை: எஸ்.எஸ்.எல்.சி கூட படிக்காதவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., மற்றும் பொறியியல் சர்ட்டிபிகேட்களை விற்ற கும்பல் 100 கோடி ரூபாய் வரை சுருட்டியுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகி உள்ளது.
பிரபலமான பல்கலைக் கழகங்களின் பெயரில் போலியாக கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து விற்ற கோவையை சேர்ந்த சண்முகசுந்தரி, அவருக்கு உடந்தையாக இருந்த கணேஷ்பிரபு, போலி சான்றிதழ் பெற்ற அருண்குமார் ஆகிய 3 பேரை ஞாயிறன்று கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கோடிக்கணக்கில் பணம்
சண்முகசுந்தரியும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து தமிழகம் முழுவதும் கிளை நிறுவனம் துவங்கி ஏராளமானவர்களுக்கு எல்.எல்.பி., எம்.பி.பி.எஸ், பி.இ., உள்ளிட்ட பல்வேறு போலி கல்வி சான்றிதழ்கள் கொடுத்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
போலீஸ் கஸ்டடி
போலி சான்றிதழ் வழங்கியதில் வெளிமாநில பல்கலைக் கழக ஊழியர்கள் சிலரும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து முக்கிய குற்றவாளியான சண்முக சுந்தரியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக நாளை முறைப்படி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு செய்ய உள்ளனர்.
லேப் டாப்பில் ரகசியம்
சண்முகசுந்தரியை போலீசார் கைது செய்த போது அவரது லேப்-டாப் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர். அதில் முக்கிய தகவல்கள் அடங்கிய பைல்கள் ‘பாஸ் வேர்டு' மூலம் ‘லாக்' செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அதில் போலி சான்றிதழில் தொடர்புடையவர்கள் பற்றிய ரகசிய தகவல்கள் இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனவே, சண்முக சுந்தரியை காவலில் எடுத்து விசாரிக்கும் போது லேப்-டாப்பில் உள்ள ரகசியத்தையும் பெற போலீசார் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
கணவரிடம் விசாரணை
சண்முகசுந்தரியின் கணவர் குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளதால் அவரிடமும் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.
தலைமறைவான குற்றவாளிகள்
தலைமறைவான அழகிரி, கார்த்திகேயன் உள்பட பலரை தேடி வருகிறார்கள். சண்முகசுந்தரியை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
14 பல்கலைக்கழகங்கள்
இதற்கிடையே இந்த ஹை-டெக் மோசடியின் பின்னணியில் டெல்லியைச் சேர்ந்த அமித்சிங் என்பவன் தலைவனாக செயல்பட்டுள்ளான். மேலும் 14 பல்கலைக் கழகங்களிலும் உள்ள முக்கிய அதிகாரிகள் பலரும் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் யார் என்றும் விசாரணை நடக்கிறது.
மின்வாரியத்தில் போலிகள்
மின் வாரிய சட்டப் பிரிவு ஊழியர்கள், போலி சான்றிதழ் பயன்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னை, அண்ணா சாலையில், தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. இதில், சட்டப் பிரிவு உள்ளது. இங்கு பணிபுரியும், சில ஊழியர்கள், எல்.எல்.பி., சட்டப் படிப்பு சான்றிதழ்களை போலியாக வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, உயர் அதிகாரிகள் விரிவாக விசாரணை நடத்தினால், உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது.
100 கோடி சுருட்டல்
அரசு துறைகளில் எத்தனை பேர் போலி சான்றிதழ் மூலம் பணிநியமனம் பெற்றுள்ளனர் என்றும் விசாரணை நடக்கிறது. மற்றும் திருமணத்துக்காகவும் பலர் போலி சான்றிதழ்கள் பெற்று இருப்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே இந்த கும்பல் சுமார் ரூ. 100 கோடி வரை சுருட்டியிருக்கலாம் என்று கூறப்படுவதால் போலீசார் தங்களின் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.