பத்தாப்பு பெயில்... ஃபேஸ்புக்கில் டாக்டர் வேஷம்.. பல பெண்களை ஏமாற்றிய ஆசாமி கைது
சென்னை: பத்தாம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாத ஒரு நபர் ஃபேஸ்புக்கில் டாக்டர் என போட்டுக்கொண்டு பல பெண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து நகைகளை பறித்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தில்லாலங்கடி வேலை செய்த 'தீராத விளையாட்டுப் பிள்ளையை' போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களால் பல நன்மைகள் இருந்தாலும், சிலர் இதனை தவறான வழிகளில் பயன்படுத்துவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது. சிலர் தங்களை பற்றிய உண்மை விவரங்களை மறைத்து பொய்யான தகவல்களை வெளியிடுவதால் அவர்களை தொடர்பு கொள்ளும் நன்கு படித்த பெண்கள் தங்களையும், தங்கள் உடமைகளையும் இழந்து ஏமாறும் நிலையும் உள்ளது. இதேபோன்ற சம்பவம் சென்னையில் அரங்கேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் பிரபல வழக்கறிஞர்கள் சகோதரர்கள் கூட்டுக்குடும்பமாக வசிக்கின்றனர். அவர்கள் தங்க நகைகளை தங்கள் தாயாரிடம் கொடுத்து வைத்திருந்தனர். இதில் தம்பி குடும்பத்தினரின் நகைகள் அப்படியே இருக்க, அண்ணன் குடும்பத்தினரின் நகைகள் 60 சவரனுக்கு மேல் காணாமல்போனது. இதுகுறித்து அந்த வழக்கறிஞர்களின் குடும்பத்தினர் குரோம்பேட்டை போலீசில் புகார் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது வழக்கறிஞரின் மகள்தான் நகையை எடுத்து வாலிபர் ஒருவரிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.
தன்னுடைய தோழி ஒருவருக்கு ‘ஃபேஸ் புக்' மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்க்கும் டாக்டர் முகமது ஷானு என்பவர் பழக்கமானார். டாக்டருக்கான அடையாள அட்டையையும் அவர் வெளியிட்டு இருந்ததார். தோழி மூலம் என்னுடைய வீட்டின் விவரங்களை தெரிந்து கொண்ட அந்த டாக்டர், என்னுடைய வீட்டில் நடக்கும் சில பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நகைகளை பூஜை செய்து கொண்டு வந்தால் சரியாகிவிடும் என்றார்.
கேரளாவில் பூஜை செய்து கொண்டுவருவதாக கூறி நகைகளை சிறுக, சிறுக வாங்கினார். அதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவித்தார். இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
ஜிப்மர் மருத்துவமனையில் விசாரித்தபோது அதுபோல அங்கு யாரும் பணியாற்றவில்லை என தெரியவந்தது. போலீசார் முகமது ஷானுவின் செல்போன் நம்பரை வைத்து அவர் யார்? என்ற விவரங்களை சேகரித்தபோது மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.
எஸ்.எஸ்.எல்.சி பெயில்
முகமது ஷானுவின் உண்மையான பெயர் ரகுமத்துல்லா (வயது 27). அவர் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்த அசன்அலி என்பவரது மகன் என்றும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் எனவும் தெரியவந்தது. அவருடைய ‘ஃபேஸ்புக்' பக்கத்தில் யாராவது அவரை தொடர்பு கொள்கிறார்களா? என போலீசார் இரவு பகலாக கண்காணித்து வந்தனர்.
பல பெண்களுடன் தொடர்பு
அப்போது டாக்டர் ஷானு என்ற பெயரில் ரகுமத்துல்லா சென்னை, சேலம், கன்னியாகுமரி, பெங்களூரு, திருநெல்வேலி என பல பகுதிகளிலும் ஃபேஸ்புக் மூலம் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.
ஏமாந்த பெண்கள்
டாக்டர் என கூறியதால் பல இளம்பெண்கள் அவருடன் தொடர்பு கொண்டுள்ளனர். இதில் எளிதில் ஏமாறுபவர்களை தேர்வு செய்து அந்த பெண்ணுடன் செல்போனில் பேசி பழகி வந்துள்ளார். இதில் ஏமாறும் பெண்களுடன் உல்லாசமாக சுற்றிவிட்டு, கிடைக்கும் நகைகளை சுருட்டிக்கொண்டு அதை விற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
இவரிடம் ஏமாந்த பெண்கள் வீட்டில் கூறினால் அவமானம் என்று கருதி போலீசில் புகார் செய்யாமல் இருந்துவிட்டனர். இதனால் துணிந்த போலி டாக்டர், பல பெண்களிடம் தன்னுடைய தில்லாலங்கடி வேலைகளை செய்துள்ளான்.
புழலில் அடைப்பு
தீராத விளையாட்டு பிள்ளையாய் சுற்றித்திருந்து தன்னுடைய லீலைகளை தொடர்ந்த ரகுமத்துல்லாவை ஃபாலோ செய்து அமுக்கிய போலீசார், அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
நகைகள் பறிமுதல்
ரகமத்துல்லாவிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் கொடுத்த தகவலின்பேரில் சுமார் 40 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். ஃபேஸ்புக் மூலம் இளம்பெண்கள் அறிமுகம் இல்லாத நபர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். பெண்களை ஏமாற்றி வந்த குற்றவாளியை திறமையாக பிடித்த தனிப்படை போலீசாரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பாராட்டினார்.