படித்தது நர்ஸ்... பார்த்தது டாக்டர் வேலை... நெல்லையில் இளம்பெண் கைது
நெல்லை: பி.எஸ்.சி நர்சிங் படித்து விட்டு எம்.பி.பி.எஸ் டாக்டர் போல அரசு மருத்துவமனைக்குள் சுற்றித்திரிந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சுமார் 3000 பேர் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாக சுமார் 5000 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நெல்லை மாவட்டம் மட்டும் அல்லாமல் அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகளில் நுழைந்த ஒரு பெண்மணி, அங்கிருந்த நோயாளிகளிடம் தன்னை டாக்டர் என அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி விசாரித்துள்ளார்.
இந்த நிலையில், மருத்துவமனையின் டீன் டாக்டர். சித்தி அத்திய முனவரா இருந்த வார்டுக்குள் அந்த போலி மருத்துவர் நுழைந்து, சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித் திரிந்துள்ளார்.அவரது நடவடிக்கையால் சந்தேகம் அடைந்த டீன் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணான வகையில் பேசியுள்ளார்.
பெண்ணின் பதிலில் அதிருப்தியடைந்த டீன், உடனடியாக போலீசுக்கு போன் செய்தார். மருத்துவமனைக்கு வந்த போலீசார் அந்தப் பெண்ணை விசாரணைக்காக ஐகிரவுண்ட் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
முக்கூடல் அருகே உள்ள கபாலிப்பாறை கிராமத்தை சேர்ந்த பிரியா என்பது தெரியவந்தது. பி.எஸ்சி நர்சிங் முடித்துள்ள அவர், எதற்காக மருத்துவமனையில் டாக்டர் என்று கூறிக்கொண்டு சுற்றித் திரிந்தார் என்பது பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். நெல்லை அரசு மருத்துவமனையில் போலி டாக்டர் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.