அட நாராயணா. .நம்பி வந்தாரே.. இப்படியா கட் பண்ணுவீங்க நாராயணா!
ஜூரம் என்று வந்தவரின் நாக்கை அறுத்த நாட்டு வைத்தியர் கைது செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை: கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா... அங்க ஒரு கொடுமை தலைவிரிச்சாடுச்சாம்.. அந்த மாதிரிதான் அருப்புக் கோட்டையிலும் சம்பவம் நடந்திருக்கிறது.
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஊர் செம்பட்டி. இங்கு வசித்து வந்தவர் பாலமுருகன். இவருக்கு அடிக்கடி சளி, ஜூரம் இருந்து கொண்டே இருந்தது. அதனால் ஹோமியோமதி மருத்துவத்தில் இருந்து எல்லா மருத்துவமும் பார்த்தாகிவிட்டது.
நாட்டு வைத்தியம்
ஆனால் ஜூரம் போகவே இல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தனியார் ஆஸ்பத்திரி வரை பாலமுருகன் போய் விட்டார். ஒன்னும் வேலைக்காகவில்லை.அதனால் கடைசியாக இருப்பது நாட்டு வைத்தியம் தான். அதையும் ஏன் ட்ரை பண்ண கூடாது என்று நாராயணன் என்ற நாட்டு வைத்தியரிடம் போனார்.
நம்பி வந்திருக்கேன்
நாராயணனுக்கு வயசு 65, ரொம்ப வருஷமாக அந்த பகுதியில் அவர் வைத்தியம் பார்த்து வருபவராம். அவரிடம் சென்ற பாலமுருகன், "எங்கெங்கியோ போய் பார்த்துட்டேன். எல்லா வைத்தியமும் பண்ணிட்டேன், ஆனாலும் ஜூரம்போகலை.. உங்களதான் நம்பி வந்திருக்கேன்" என்றார்.
வலியால் அலறினார்
உடனே நாராயணன், முருகனை வாயை திற என்றார். நம்பி வாயை திறந்த முருகனின் உள்நாக்கை பக்கத்திலிருந்து சாதாரண கத்திரிகோல் வைத்து அறுத்து விட்டார். வலியால் அலறி துடித்த முருகனிடம், அப்படித்தாம்பா இருக்கும்... உள்நாக்கு அதிகமாக வளர்ந்து இருக்குல்ல.. அதான் உனக்கு சளி போகலை... அதை கட் பண்ணி எடுத்துட்டா சரியாயிடும் என்று காரணம் வேறு சொல்லி இருக்கிறார்.
தீவிர சிகிச்சை
ரத்தம் அளவுக்கு அதிகமாக தொண்டையிலிருந்து கொட்டி மயங்கி விழுந்தார் முருகன்.உடனடியாக அருகிலிருந்தவர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பால முருகனை சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலமுருகனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், இதுகுறித்து மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் மனோகரனுக்கு தகவல் சொல்ல, மனோகரன் அருப்புக்கோட்டை தாலுகா போலீசாருக்கு புகார் அளித்தார்.
நாராயணன் கைது
இது சம்பந்தமான புகார் வந்ததையடுத்து, விரைந்து வந்து விசாரணை நடத்திய போலீசார் வைத்தியர் நாராயணனை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் வைத்தியம் பார்ப்பதற்காக வைத்திருந்த கத்தி, கத்திரிகோல் உள்ளிட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். சளி ஜூரம் வரும்போது அந்த காலத்தில் உள்நாக்கை அறுப்பது மூடநம்பிக்கையாக இருந்தது. ஆனால் இப்போதும் அதே நடந்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டு வைத்தியர் நாராயணன் நாக்கை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.