போலி ஆவணம் தயாரிப்பு - துணை தாசில்தார் அதிரடி இடமாற்றம்
நெல்லை: போலியாக நில ஆவணங்கள் தயாரித்த வழக்கில் சிக்கிய அம்பை துணை தாசில்தார் சந்திரன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் வழங்கினார்.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள இரவணசமுத்திரத்தை சேர்ந்தவர் செய்யது அபுதாகீர். இவர் தொடர்பான ஆவணங்களை திருத்தியதாக அளித்த புகாரின் பேரில் அம்பை துணை தாசில்தார் சந்திரன் உள்பட 3 பேர் மிது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதே போல் பாண்டி என்பவரும் அம்பை துணை தாசில்தார் சந்திரன் மீது புகார் அளித்தது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் விசாரணை நடத்தி அந்த ஆவணங்களை ரத்து செய்ய உத்தரவிட்டதுடன் சம்பந்தப்பட்ட அனைத்து வருவாய் அலுவலர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனிடையே அம்பை துணை தாசில்தார் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் தொடர்ந்து பணி செய்து வருவதால் தேவையற்ற குழப்பம் மற்றும் ஆவணங்களை மாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் அம்பை துணை தாசில்தாரை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என பலர் வலியுறுத்தினர்.
டிஎஸ்பியின் மாநில செய்தி தொடர்பாளர் உஸ்மன்கான் இது தொடர்பாக நெல்லை கலெக்டரிடம் மனு அளித்தார். இதையடுத்து அம்பை துணை தாசில்தார் சந்திரனை நாங்குநேரிக்கு இடம் மாற்றம் செய்து கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் நெல்லை வருவாய் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.