கிருஷ்ணகிரியில் போலி ஐ.பி.எஸ் அதிகாரியும், அவருக்கு உதவிய ஏட்டும் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் போலி ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும் அவருக்கு உதவிய ஏட்டை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக பல்சர் பைக்கில் வந்த இருவர் சாலையோரம் நின்று டீ குடித்து கொண்டிருந்தனர்.
இதில் ஒருவர் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அணியும் சீருடையில் இருந்ததால் சந்தேகமடைந்த எஸ்.பி திருநாவுக்கரசு அவர்களிடம் விசாரணை நடத்தினார். "ஐ.பி.எஸ் தேர்வு பெற்று நேஷனல் போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்துவிட்டு தற்போது கோயம்புத்துாரில் ஏ.எஸ்.பியாக பயிற்சி பெற்று வருகிறேன்" என ஒருவர் தெரிவித்தார்.
சந்தேகமடைந்த எஸ்.பி. திருநாவுக்கரசு கோவையில் உள்ள ஐ.ஜி. அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது அந்த நபர் கூறியது பொய் என்று தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த கோபி என்பவரது மகன் சூர்யா என்பதும் பிளஸ் 2 வரை படித்துவிட்டு பெங்களூருவில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் 2 மாதங்களுக்கு முன் பணிபுரிந்ததும் தெரிந்தது.
அவருடன் வந்தவர் வெள்ளகோவிலை சேர்ந்த பொன்மணி என்பதும் கோவை சி.ஆர்.பி.எப்.பில் ஏட்டாக பணிபுரிந்து வருவதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.