டீல் பேசலாம் வாங்க.. தீபாவை போனில் கூப்பிட்ட டுபாக்கூர் ஐடி அதிகாரி
டீல் பேச வேண்டும் என்று தீபாவை போலி வருமான வரித்துறை அதிகாரி அழைத்ததாக தீபா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: டீல் பேச வேண்டும் என்றே தீபாவை போலி வருமான வரித் துறை அதிகாரி அழைத்ததாக தீபா தமிழ் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார்.
இன்று அதிகாலை தி.நகரில் சிவஞானம் தெருவில் வசிக்கும் தீபாவின் வீட்டுக்கு ஐடி அதிகாரி என்று சொல்லிக் கொண்டு மித்தேஷ் குமார் என்பவர் வந்தார்.
அப்போது தீபாவின் கணவர் மாதவன்தான் வீட்டில் இருந்தார். 10 மணிக்கு மேல் மேலும் 10 அதிகாரிகள் வந்தவுடன் சோதனை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதுதொடர்பாக அந்த அதிகாரி தீபாவை தொடர்பும் கொண்டு பேசினார்.
போலீஸுக்கு தகவல்
தகவலறிந்த தீபாவின் வழக்கறிஞர் சம்பவ இடத்துக்கு வந்தார். மித்தேஷ் குமாரின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவருக்கு சந்தேகம் வந்ததை அடுத்து அவர் போலீஸுக்கு தகவல் அளித்தார்.
முன்னுக்கு முன் முரண்
மித்தேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக அவர் கூறினார். இதையடுத்து போலீஸார் துருவி துருவி கேட்டதை அடுத்து சற்று எதிர்பாராத நேரமாக பார்த்து 10 அடி சுவரில் எகிறி குதித்து தப்பி சென்றார்.
3 தனிப்படை
இவரை பிடிக்க மாம்பலம் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலி அதிகாரியை பிடிக்க தேனாம்பேட்டை, தி.நகர், வடபழனி காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மர்ம நபரின் புகைப்படத்தை ரயில் நிலையங்கள், பொது இடங்களில் காட்டி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தீபா தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எனக்கு காலை வீட்டிலிருந்து போன் வந்தது. அப்போது மித்தேஷ் குமார் என்ற அதிகாரி சோதனை மேற்கொள்ள வந்துள்ளதாக கூறினர்.
டீல் பேச அழைத்தார்
அச்சமயம் என்னுடைய உதவியாளரிடம் இருந்து போனை வாங்கி அந்த அதிகாரியே பேசினார். அப்போது அவர் இன்னும் 15 நிமிடத்துக்குள் வீட்டுக்கு வருமாறு கூறினார். மேலும் என்னிடம் ஏதோ டீல் பேச வேண்டும், நீங்கள் வராவிட்டால் நான் சோதனையிடுவேன் என்றும் கூறினார்.
அதிகாரி தப்பி விட்டார்
என்ன டீல் பேச போகிறீர்கள் என்று கேட்டதற்கு அந்த நபர் எதையும் கூறவில்லை. பின்னர் எனது அட்வகேட்டிடம் தகவல் கூறினேன். அவர் போலீஸிடம் கூறினார். அவர்கள் வந்து விசாரித்தவுடன் அந்த அதிகாரி தப்பி ஓடி விட்டார். போலி அதிகாரி என்னை மிரட்டவோ, அச்சுறுத்தவோ வந்திருக்கலாம். இல்லாவிட்டால் எங்கள் வீட்டில் ஏதேனும் திருடும் முயற்சிக்காகவும் வந்திருக்கலாம் என்றார் தீபா.